ராகுல்காந்தி தகுதிநீக்கம்... வயநாடு தொகுதி காலியானதாக மக்களவை செயலகம் அறிவிப்பு!!

By Narendran SFirst Published Mar 24, 2023, 11:49 PM IST
Highlights

ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து கேரளாவின் வயநாடு மக்களவைத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து கேரளாவின் வயநாடு மக்களவைத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலின்போது கர்நாடக மாநிலம், கோலாரில் நடந்த தேர்தல் பிரசார பேரணியில் ராகுல்காந்தி கலந்துக்கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், அனைத்து திருடர்களும் எப்படி மோடி என்ற குடும்ப பெயரை வைத்துள்ளனர் என்று தெரிவித்தார். அவரின் இந்த கருத்து சர்ச்சையானது. இதனிடையே ராகுலுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சூரத் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் ராகுல் காந்தி குற்றவாளி என தீர்ப்பளித்ததோடு அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டது.

இதையும் படிங்க: அதிகார வெறி கொண்ட சர்வாதிகாரியின் முன் காந்தி குடும்பம் தலைகுனியாது... பிரியங்கா காந்தி ஆவேசம்!!

ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து மக்களவை எம்.பி பதவியிலிருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில் வயநாடு மக்களவைத் தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை இணையதளத்தின்படி, தற்போது ஜலந்தர், லட்சத்தீவு மற்றும் வயநாடு ஆகிய மூன்று இடங்கள் காலியாக உள்ளன. காங்கிரஸ் உறுப்பினர் சந்தோக் சிங் சவுத்ரியின் மறைவுக்குப் பிறகு ஜலந்தர் தொகுதி காலியானது, கொலை முயற்சி வழக்கில் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட என்சிபி உறுப்பினர் முகமது பைசல் பிபி தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் லட்சத்தீவு தொகுதி காலியானது.

இதையும் படிங்க: ராகுலின் பார்லிமென்ட் வருகை மோசம்; ஒரு மசோதா கூட அறிமுகப்படுத்தப்படவில்லை… அனைத்தையும் போட்டுடைத்த தரவுகள்!!

சூரத்தில் உள்ள நீதிமன்றம், அவதூறு பேச்சு வழக்கில் ராகுல்காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. மேலும் நீதிமன்றம் அவருக்கு மேல்முறையீடு செய்ய அனுமதிக்கும் வகையில் 30 நாட்கள் ஜாமீன் வழங்கியது. ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து மக்களவை எம்.பி பதவியிலிருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதை அடுத்து கேரளாவின் வயநாடு மக்களவைத் தொகுதியும் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், இந்த விவகாரத்தில் சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் போராடுவோம் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. 

click me!