
நாட்டின் முக்கிய புலனாய்வு அமைப்பான சிபிஐ-யில் 1,594 பணியிடங்கள் காலியாக இருப்பதாக நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து அரசுப் பணி, மக்கள் குறை தீர்ப்பு, சட்டம் மற்றும் நீதி துறைகளின் நாடாளுமன்ற நிலைக்குழு இரு அவைகளிலும் தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
அதன்படி, கடந்த பிப்ரவரி வரையிலான கணக்கெடுப்பின்படி சிபிஐ-யில் அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் 7,274 ஆகும். இதில் 1,594 பணியிடங்கள் அதாவது 22 சதவீதம் காலியாக இருப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து நாடாளுமன்றக் குழு தனது அறிக்கையில், “எங்கள் குழுவின் மதிப்பீட்டின்படி, பணியிடங்களை நிரப்புவதில் உடனடியாக போதிய முன்னேற்றம் எட்டப்படவில்லை எனில் அதன் பாதிப்பு விரைவில் வெளிப்படை யாகத் தெரியும்” என்று கூறியுள்ளது.
ஆண்டுக்கு சுமார் 700 வழக்குகளை மட்டுமே சிபிஐ-யால் விசாரிக்க முடியும். ஆனால் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்படும் வழக்குகளால் சிபிஐயிடம் இரு மடங்கு வழக்குகள் சேர்ந்து விடுகிறது.
சிபிஐ பொறுப்பு இயக்குநராக இருந்த ராகேஷ் அஸ்தானா, கடந்த டிசம்பர் 31-ல் நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அறிக்கை அளித்திருந்தார். அப்போது அவர், 1,156 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் அதில், 664 வழக்குகள் ஊழல் வழக்குகள் என்றும் தெரிவித்திருந்தார்.
இதை கவனத்தில் கொண்ட நாடாளுமன்ற நிலைக்குழு, “உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல், தீவிரவாதம், இணையதள குற்றங்கள் மற்றும் ஊழல் வழக்குகள் பெருகி வருகின்றன. இந்த நிலையில், சிபிஐ-யில் காலிப் பணியிடங்கள் நீடிப்பது சரியல்ல” என்று கூறியுள்ளது.
இதற்காக, மாநில காவல் துறை மற்றும் மத்திய பாதுகாப்பு படைகளின் அதிகாரிகளை அயல்பணியில் அமர்த்த கவர்ச்சிகரமான அறிவிப்பு களை வெளியிடலாம் என்றும் யோசனை கூறியுள்ளது.
சிபிஐ பணிக்கு வரும் அதிகாரிகளுக்கு அரசுக் குடியிருப்பு கிடைப்பது பெரிய பிரச்சினையாக உள்ளது. நாட்டில் சிபிஐ பணியாளர்களில் 33.18 சதவீதம் பேருக்கு குடியிருப்புகள் உள்ளன.
ஆனால், டெல்லியில் 15%, மும்பையில் 26%, கொல்கத்தாவில் 15% பணியாளர்களுக்கு மட்டுமே குடியிருப்புகள் உள்ளன. இந்தக் குறையாலும் அதிகாரிகள் அயல் பணியாக சிபிஐ-க்கு வரத் தயங்குவதாகக் கூறப்படுகிறது.
நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவராக மாநிலங்களவை காங்கிரஸ் உறுப்பினர் ஆனந்த் சர்மா உள்ளார். இக்குழுவில் தமிழ கத்தை சேர்ந்த டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்ட்), திருச்சி சிவா (திமுக), வி.பன்னீர்செல்வம் (அதிமுக) ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.