இந்தியாவில் உள்ள சட்ட விதிகளை பின்பற்றுங்கள் அல்லது நாட்டை விட்டு வெளியேறுங்கள் என VPN சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் உள்ள சட்ட விதிகளை பின்பற்றுங்கள் அல்லது நாட்டை விட்டு வெளியேறுங்கள் என VPN சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து பேசிய அவர், கிளவுட் சேவை வழங்குநர்கள், VPN (மெய்நிகர் தனியார் நெட்வொர்க்) சேவை வழங்கும் நிறுவனங்கள், தரவு மைய நிறுவனங்கள் மற்றும் மெய்நிகர் தனியார் சேவையக வழங்குநர்கள் பயனர்களின் தரவுகளை குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்கு சேமிக்க வேண்டும் என மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை கட்டாயப்படுத்தியுள்ளது. இந்தியாவின் விதிகளையும் சட்டங்களையும் நாங்கள் பின்பற்ற மாட்டோம் என்று கூறும் நிறுவனங்களுக்கு இந்தியாவில் யாருக்கும் வாய்ப்பும் இல்லை. இந்த புதிய விதிகளால் சைபர் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும் என நிறுவனங்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால் இக்கருத்தை நான் மறுக்கிறேன் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். மேலும் இதுக்குறித்து சி.இ.ஆர்.டி -இன் (CERT-IN) வெளியிட்டுள்ள அறிக்கையில், சைபர் பாதுகாப்பு மீறல் சம்பவங்களை கவனித்த ஆறு மணி நேரத்திற்குள் கட்டாயமாகத் தெரிவிக்க வேண்டும். மேலும் அனைத்து சேவை வழங்குபவர்கள், இடைத்தரகர்கள், தரவு மையங்கள், கார்ப்பரேட்டுகள் மற்றும் அரசு நிறுவனங்கள் தங்கள் அனைத்து தகவல் தொடர்பு அமைப்புகளின் பதிவுகளை கட்டாயமாக சேமிக்க வேண்டும், அவற்றை 180 நாட்களுக்கு பாதுகாப்பாக பராமரிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அவை இந்திய அதிகார வரம்பிற்குள் பராமரிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இதனிடையே இந்திய அரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கைகள் குறித்து கூகுள், பேஸ்புக், ஐபிஎம் மற்றும் சிஸ்கோ போன்ற உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களை உறுப்பினர்களாகக் கொண்ட அமெரிக்காவில் உள்ள தொழில்நுட்ப தொழில்துறை அமைப்பான ஐடிஐ, சைபர் பாதுகாப்பு மீறல் சம்பவங்களை புகாரளிப்பது குறித்த இந்திய அரசாங்கத்தின் வழிகாட்டுதலில் திருத்தம் செய்ய கோரிக்கை விடுத்துள்ளது. மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகரின் கருத்து VPN சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.