கருப்புக்கொடிகளை ஏந்தியவாறு சாலையை மறித்து போராட்டம் நடத்திய விவசாயிகளின் மீது கொலைவெறியுடன் காரை ஏற்றுவது காண்போரை பதைபதைக்க வைத்துள்ளது.
கருப்புக்கொடிகளை ஏந்தியவாறு சாலையை மறித்து போராட்டம் நடத்திய விவசாயிகளின் மீது கொலைவெறியுடன் காரை ஏற்றுவது காண்போரை பதைபதைக்க வைத்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் போராடிய விவசாயிகள் மீது கார் ஏற்றி கொல்லப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது காரை மோதி நடத்திய தாக்குதலில் 2 விவசாயிகள் உடல்நசுங்கி உயிரிழந்தனர். நாட்டு மக்களை கொதிப்படையச் செய்துள்ள இச்செயலை செய்தது மத்திய இணையமைச்சர் மிஸ்ராவின் மகன் என்று விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
தமது மகன் உத்தமர் என்று விளக்கம் கொடுத்த மத்திய இணையமைச்சர், தம் மகன் தாக்குதல் நடத்தியிருந்தால் அங்கிருந்து உயிருடன் தப்பியிருக்க முடியாது. அந்த சம்பவம் நிகழ்ந்தபோது அவர் வேறொரு நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். கார் அணிவகுப்பு மீது விவசாயிகள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் கட்டுப்பாட்டை இழந்து கார் கவிழ்ந்தபோது அதில் சிக்கி விவசாயிகள் உயிரிழந்ததாக மத்திய இணையமைச்சரும் பா.ஜ.க.-வினரும் வரிந்துகட்டி விளக்கம் கொடுத்தனர்.
ஆனால், இந்த கோரச் சம்பவத்தின் உண்மையான வீடியோக்கள் தற்போது வெளியாகி உலக மக்களை அச்சத்தில் உறையவைக்கிறது. லக்கிம்பூர் சாலையில் கருப்புக் கொடியுடன் நின்ற விவசாயிகள் மீது திட்டமிட்டே கொலைவெறியுடன் கார் ஏற்றப்படுவது வீடியோவில் பதிவாகியுள்ளது. மேலும், பாஜக-வினர் கூறியபடி அந்த கார் மீது எந்தவொரு தாக்குதலும் நடத்தப்படவில்லை என்பதும் வீடியோவில் அம்பலமாகி இருக்கிறது. ஆகவே தாக்குதலுக்கு காரணமான மத்திய இணையமைச்சரின் மகனை கைது செய்வதோடு அமைச்சரின் பதவியை பறிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.