
கர்நாடகாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே, காவிரி நீர் வரத்து, மேகதாது அணை விவகாரம் தொடர்பாக நீண்ட காலமாக பிரச்சினை உள்ளது. உச்ச நீதிமன்றமும், காவிரி நடுவர் மன்றமும் பல்வேறு அறிவுறுத்தல்களையும், உத்தரவுகளையும் பிறப்பித்திருந்தாலும் கர்நாடக அரசு அதனை மீறி செயல்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்த விவகாரங்களில் கர்நாடகாவை ஆளும் எந்த அரசாக இருந்தாலும் சரி, தமிழ்நாட்டுக்கு எதிரான நிலைப்பாட்டையே எடுத்து வருவதாக கூறுகிறார்கள்.
2023-2024 ஆம் ஆண்டில், 2023 ஜூன் 1 முதல் ஜூலை 31 வரை கர்நாடகாவிலிருந்து பிலிகுண்டுலுவிற்கு 40.4 டி.எம்.சி. தண்ணீர் வந்து சேர வேண்டிய நிலையில், 11.6 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே வந்துள்ளது. இதனால், காவிரி டெல்டா பகுதியில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் எல்லாம் உலர்ந்து போய்விடும் சூழல் உள்ளதால், தண்ணீரை திறந்து விடக் கோரினாலும், அதற்கு கர்நாக அரசு செவி மடுக்க மறுக்கிறது.
எனவே, தமிழ்நாட்டில் காவிரி டெல்டாவில் தற்போதுள்ள குறுவை நெற்பயிரைக் காப்பாற்றிடவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திடவும் ஏதுவாக காவிரியிலிருந்து உரிய நீரினைத் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடுமாறு கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
உச்ச நீதிமன்றத்தை விபசாரத்துடன் ஒப்பிட்ட வீடியோ: ‘நோ ப்ராப்ளம்’ - தலைமை நீதிபதி!
இந்த நிலையில், பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதம் குறித்து மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கிண்டலடித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தியா அல்லது ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் திமுக, காங்கிரஸ் ஆகிய இரண்டு வாரிசு கட்சிகளும், பிரதமர் மோடியை வெறுப்பதற்கும், தங்கள் வம்சத்தை பாதுகாக்கவும் மட்டுமே ஒன்றிணைகிறார்கள். அவர்களுக்குள் இருக்கும் பிரச்சினை தீர்க்க உதவுமாறு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதுகிறார்கள். ஏனெனில், அவர்களால் அதைத் தீர்க்க முடியாது.” என பதிவிட்டுள்ளார்.
மேலும், “இந்த ஜோக்கர்களால் அவர்களது பிரச்சினையையே தீர்க்க முடியாதபோது, மக்களின் பிரச்சினைகளையா தீர்க்க போகிறார்கள்.” எனவும் அவர் சாடியுள்ளார்.