குடிமகன்களுக்கு குஷியான செய்தி.. ஒயின் ஷாப்பை திறக்கலாம்.. “பச்சை” கொடி காட்டிய மத்திய அரசு

By karthikeyan VFirst Published May 1, 2020, 8:17 PM IST
Highlights

கொரோனா பாதிப்பில்லாத பச்சை மண்டல பகுதிகளில் மதுக்கடைகளை திறக்க மத்திய அரசு அனுமதித்துள்ளது. 
 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 35 ஆயிரத்தை கடந்துள்ளது. இதுவரை 9 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ள நிலையில், 1150க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 

மகாராஷ்டிராவில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், குஜராத், டெல்லி, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் பாதிப்பு கடுமையாக உள்ளது. 

எனவே கொரோனா பாதிப்பு இன்னும் கட்டுக்குள் வராததால் ஊரடங்கை நீட்டிக்க வேண்டிய அவசியம் உள்ளதால் கட்டாயத்தின் பேரில் மே 3க்கு பிறகு மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டித்துள்ளது மத்திய அரசு. 

கொரோனா பாதிப்பு பகுதிகள், ஊரடங்கை தளர்த்துவதற்கும்  கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்வதற்கும் ஏதுவாக சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. பாதிப்பு கடுமையாக உள்ள பகுதிகள் சிவப்பு மண்டலத்திலும், பாதிப்பிலிருந்து மீண்ட மற்றும் குறைவான பாதிப்புள்ள பகுதிகள் ஆரஞ்சு மண்டலத்திலும் இதுவரை கொரோனா பாதிப்பே இல்லாத மாவட்டங்கள் பச்சை மண்டலத்திலும் இடம்பெற்றுள்ளன. 

அந்தவகையில், மண்டல வாரியாக ஊரடங்கு தளர்வு குறித்த அறிவுறுத்தல்களையும் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி பச்சை மண்டலங்களுக்கு சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.

பச்சை மண்டலங்களில் 50% பயணிகளுடன் 50% பேருந்துகள் இயங்கலாம், பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டல பகுதிகளில் அத்தியாவசியமற்ற பொருட்களையும் இ வணிகம் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மதுப்பிரியர்களுக்கு குஷியான செய்தியாக, பச்சை மண்டலங்களில் மதுக்கடைகள் மற்றும் பீடா கடைகளை திறக்கலாம் எனவும் ஆனால் 6 அடி தூரம் இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் ஒரு சமயத்தில் 5 பேரை மட்டுமே அனுமதிக்க வேண்டும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 
 

click me!