பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

By Manikanda PrabuFirst Published Jun 7, 2023, 5:01 PM IST
Highlights

கரீஃப் சந்தைப் பருவத்திற்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

பிரதமர் மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில், 2023-24-ஆம் ஆண்டு கரீஃப் சந்தைப் பருவத்திற்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (MSP) மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் அறிவித்தார். உற்பத்தி விலை என்பது,  விவசாய பணியாளர்களுக்கான செலவு, கால்நடைகள் மற்றும் இயந்திரங்களுக்கான செலவு, விதைகள், உரங்கள் மற்றும் நீர்ப்பாசன செலவுகள், பம்ப்செட் போன்றவற்றின் தேய்மானச் செலவுகள் போன்றவற்றை உள்ளடக்கியதாகும். அந்த வகையில், 2023-24-ஆம் ஆண்டு கரீஃப் சந்தைப் பருவத்திற்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை (எம்எஸ்பி) மத்திய அரசு அதிகரித்துள்ளதாகவும், விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு லாபகரமான விலையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நிலக்கடலை குறைந்தபட்ச ஆதார விலை ஒரு குவிண்டால் ரூ.4,000லிருந்து ரூ.6,377ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. சூரியகாந்தி விதை குறைந்தபட்ச ஆதார விலை ஒரு குவிண்டால் ரூ.3,750 ரூ.6,760 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. சோயா பீன்ஸ் ஒரு குவிண்டால் 2,560 ரூபாயிலிருந்து 4,600 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

2018-19ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில், உற்பத்தி விலையைவிட குறைந்தபட்ச ஆதரவு விலை ஒன்றரை மடங்குக்கு கூடுதலாக இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில் விவசாயிகளுக்கு  நியாயமான விலை கிடைக்கும் வகையில், 2023-24-ஆம் ஆண்டுக்கான கரீஃப் சந்தைப்பருவ குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், பஜ்ராவுக்கு 82 சதவீதமும், துவரைக்கு 58 சதவீதமும், சோயாபீனுக்கு 52 சதவீதமும், உளுந்துக்கு 51 சதவீதமும், விவசாயிகளுக்கு அதிகமாக கிடைக்கும் மற்ற பயிர்களுக்கு  உற்பத்தி செலவைவிட குறைந்தபட்சம் 50 சதவீத அளவுக்கு விவசாயிகளுக்கு அதிக விலை கிடைக்கும். முதல்தர வகை நெல், ஜோவார் - மல்தாண்டி, நீண்ட இழை பருத்தி ஆகியவற்றுக்கு உற்பத்தி விலை தனியாக கணக்கிடப்படவில்லை.

2024 தேர்தல்... கூட்டணியில் இரண்டு முக்கிய கட்சிகள்? உற்சாகத்தில் பாஜக!

கடந்த சில ஆண்டுகளாக பருப்பு, எண்ணெய் வித்துக்கள், சிறுதானியங்கள்  போன்றவற்றின் சாகுபடியை அரசு ஊக்குவிப்பதுடன் அவற்றுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரித்து வழங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர தேசிய விவசாயிகள் வளர்ச்சித்திட்டம் (ஆர்கேவிஒய்), தேசிய உணவுப்பாதுகாப்புத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களையும் அரசு செயல்படுத்தி விவசாயிகளுக்கு ஊக்கம் அளித்து வருவதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது.

2022-23-ஆம் ஆண்டுக்கான முன்கூட்டிய மதிப்பீடுகளின்படி நாட்டின் ஒட்டுமொத்த உணவு தானிய உற்பத்தி 330.5 மில்லியன் டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது முந்தைய  2021-22-ஆம் ஆண்டைவிட 14.9 மில்லியன் டன் அதிகமாகும். அத்துடன் கடந்த 5 ஆண்டுகளில் மிக அதிக உற்பத்தி இது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!