
துருக்கி ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தின் வலது இன்ஜினில் தீப்பிடித்ததால் கொல்கத்தா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து இஸ்தான்புல்லுக்கு புறப்பட்ட நான்கு நிமிடங்களுக்குள் அந்த விமானத்தில் தீப்பிடித்தது. வலது இன்ஜினில் தீப்பிடித்ததால் கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் அந்த விமானம் அவசரமாக தரையிறங்கியது.
"துருக்கி ஏர்லைன்ஸின் 'THY-727' என்ற விமானம் புறப்பட்ட நான்கு நிமிடங்களில் வலது இன்ஜினில் தீ ஏற்பட்டது. விமானிகள் விமானத்தை காத்மாண்டுவின் மேற்குப் பகுதிக்குத் திருப்பி, வலது இன்ஜினை நிறுத்தி, சுமார் 10 நிமிடங்கள் விமானம் வானில் வட்டமடித்தது'' என்று திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தின் பொது மேலாளர் டெக்நாத் சிதௌலா தெரிவித்தார். விமானத்தில் தீப்பிடித்தது தெரியவந்ததும் திரிபுவன் சர்வதேச விமான நிலையம் சுமார் 15 நிமிடங்கள் மூடப்பட்டது.
தீப்பிடித்த விமானத்தில் சுமார் 225 பயணிகள் இருந்தனர். அந்த விமானம் மேற்கு வங்கத்தில் தரையிறங்கியதும் அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தின் இயக்குனர், காத்மாண்டுவிலிருந்து இஸ்தான்புல் சென்ற துருக்கிய 727 விமானம், கொல்கத்தா விமான நிலையத்தில் முழு அவசரகால தரையிறக்கம் செய்யப்பட்டதாக உறுதிப்படுத்தியுள்ளார். தீ விபத்துக்குள்ளான விமானம் தற்போது கொல்கத்தா விமான நிலையத்தில் உள்ளது. தீ விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.