அய்யப்பனை தரிசிக்க சபரிமலைக்கு வந்த 4 திருநங்கைகளை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பியதால் அங்கு சிறிது நேரம் பதற்றம் நிலவியது.
சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்புக்கு பல தரப்புகளில் ஆதரவும், எதிர்ப்புகளும் எழுந்துள்ளன. இந்த தீர்ப்பை எதிர்த்து ஐயப்ப பக்தர்களும், இந்துத்துவ அமைப்புகளும் தொடர்ந்து போராடுவதும், காவல்துறையினர் அவர்களை கைது செய்வதும் தினசரி வழக்கமாகிவிட்டது. எனினும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை பின்பற்றுவதில் கேரள அரசும், முதலமைச்சர் பினராயி விஜயனும் உறுதியுடன் உள்ளனர்.
இதையடுத்து நேற்று காலை அவந்திகா, அனன்யா, திருப்பதி, ரஞ்சுமோல் ஆகிய திருநங்கைகள் இருமுடி கட்டி மாலை அணிந்து சபரிமலைக்கு வந்தனர். இவர்கள் நால்வரையும் எருமேலி பகுதி அருகே காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
அவர்களை கோயிலுக்குள் அனுமதிக்க முடியாது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அதற்கு திருநங்கைகளோ, கோயிலுக்குள் செல்ல பெண்களுக்குத்தான் தடை உள்ளதே தவிர திருநங்கைகளுக்கு அல்ல என்று தெரிவித்துள்ளனர். இருதரப்புக்கும் வாக்குவாதம் நடைபெற்ற பிறகு திருநங்கைகள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அனன்யா , எங்களை காவல்துறையினர் அனுமதிக்க மறுக்கின்றனர். சிறையில் அடைத்துவிடுவோம் என்று மிரட்டினர். ஆண்களின் உடை அணிந்துவந்தால் பரிசீலனை செய்வோம் என்று ஒரு காவல் அதிகாரி அவமானப்படுத்தினார் என்றார்.
தங்களை போலீசார் நான்கு மணி நேரம் தடுத்து வைத்திருந்ததாகவும், பின்னர் கட்டாயப்படுத்தி பேருந்தில் ஏற்றி அனுப்பிவிட்டதாகவும் தெரிவித்த அனன்யா, இதை எதிர்த்து கேரளா முழுவதும் திருநங்கைகள் போராட்டம் நடத்துவார்கள் என்று கூறினார்.