21 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்... சும்மா கெத்தா... மாஸா.. குஜராத் CM ஆக பதவியேற்ற மோடி.. புகைப்படம் வைரல்

By Ezhilarasan BabuFirst Published Oct 7, 2022, 11:46 AM IST
Highlights

குஜராத் முதலமைச்சராக 13 ஆண்டுகாலம் நாட்டின் பிரதமராக 8 ஆண்டுகாலம் என பிரதமர் மோடி  தனது வெற்றிகரமான அரசியல் தலைமைப் பொறுப்பை இன்றுடன் 21 ஆண்டு காலம் நிறைவு செய்துள்ளார்.

குஜராத் முதலமைச்சராக 13 ஆண்டுகாலம் நாட்டின் பிரதமராக 8 ஆண்டுகாலம் என பிரதமர் மோடி  தனது வெற்றிகரமான அரசியல் தலைமைப் பொறுப்பை இன்றுடன் 21 ஆண்டு காலம் நிறைவு செய்துள்ளார். 2021 அக்டோபர் 7  அன்று இதே நாளில் குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக பிரதமர் மோடி பொறுப்பேற்று இன்றுடன் 21 ஆண்டுகள் நிறைவடைகிறது.

குஜராத் மாநிலம் மெக்சானா, வாத் நகரில் சாதாரண ஏழைக் குடும்பத்தில் 1950 அம் ஆண்டு பிறந்தார். நரேந்திர தாமோதரதாஸ் மோடி. தனது 8 வயதிலேயே ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தொடர்பு ஏற்பட்டு தனது 21வது வயதில் அந்த அமைப்பின் முழுநேர  பிரச்சாரகர் ஆனார் அவர். 1971-ல் முறையாக அதில் அவர் இணைந்தார். ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் மிக கடுமையாக உழைத்த அவர், 2001 இல் குஜராத் முதல்வராக இருந்த கேசுபாய் பட்டேல் பதவி விலகியதை தொடர்ந்து நடந்த இடைத்தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக நின்று வெற்றி பெற்று குஜராத் மாநிலத்தின் முதல்வரானார்.

அக்டோபர்-7 2001 அன்று அவர் முதலமைச்சராக பதவியேற்றார். (அந்நாள்தான் இன்று) அவர் பொறுப்பேற்ற அதே ஆண்டு குஜராத் பூகம்பத்தால் பேரழிவை சந்தித்தது ஆனால் சற்றும் கலங்காத மோடி ஒரு சில ஆண்டுகளிலேயே அம்மாநிலத்தை அழிவில் இருந்து மீட்டார். அவர் முதலமைச்சர் ஆனது முதல் குஜராத் மாநிலம் பல்வேறு துறைகளில் நினைத்துப்  பார்க்க முடியாத அளவிற்கு வளர்ச்சி பெற ஆரம்பித்தது. மோடி அம்மாநிலத்திற்கு வகுத்த ஒவ்வொரு வளர்ச்சித் திட்டங்களும் நாட்டிலேயே முன்னோடி திட்டங்களாக மாறின. பிற மாநிலத்தவரும் பிற நாடுகளும் அவரின் திட்டங்களை மாடல் திட்டங்களாக எடுத்து செயல்படும் ளவிற்கு அத்திட்டங்கள் சிறப்பு வாந்தவையாக மாறின.

இதையும் படியுங்கள்: maiden cough syrup: 66 குழந்தைகளை பலிகொண்ட மெய்டன் இருமல் மருந்து இந்தியாவில் விற்பனை இல்லை

நாட்டிலேயே பலதுறைகளில் முன்னோடி மாநிலமாக குஜராத்தை வடிவமைத்தார் மோடி. அவர் பதவியேற்ற இரண்டாம் ஆண்டில், 2002-ல் குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடந்தது. அக்கலவரத்தில் 1000 பேர் உயிரிழந்தனர், அதில் அம்மாநில முதல்வர் மோடிக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் பல ஆண்டுகள் கழித்து அந்த வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் அமைத்த சிறப்பு குழு மோடி குற்றமற்றவர் என உறுதி செய்ததால் அதில் இருந்து அவர் விடுதலையானார். அன்று முதல் இன்று வரை அம்மாநிலம் கலவரம் அற்ற மாநிலமாக, அமைதிப் பூங்காவாக உள்ளது.

இதையும் படியுங்கள்: ஓபிஎஸ்சுடன் 100 சதவீதம் இணைந்து செயல்பட வாய்ப்பே இல்லை... ஒரே போடாக போட்ட இபிஎஸ்..!

முன்னதாக கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தின் பின்னணியில் மோடி இருக்கிறார் என குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் மோடி, அந்த ஆண்டே நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு வென்று இரண்டாவது முறையாக முதலமைச்சரானார் மோடி. குஜராத் மாநிலத்தை முன்னோடி மாநிலமாக கொண்டுசெல்வதே என் லட்சியம்  என அவர் சூளுரைத்தார், 2007 மற்றும் 2012 ஆண்டுகளில் நடந்த சட்டமன்ற தேர்தல்களிலும் வெற்றி பெற்று 4முறை அம்மாநில அமைச்சராக பதவி வகித்தார் அவர். மொத்தத்தில் 13 ஆண்டுகாலம்  குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தவர் என்ற பெருமையை மோடி பெற்றார்.

அவரின் வளர்ச்சி திட்டங்களை முன்வைத்து மோடியின் குஜராத் மாடல் என்ற பிரச்சாரம் தேசிய அளவில்  பிரபலமானது. அதைத்தொடர்ந்து 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக பிரதமர் வேட்பாளராக மோடியை அறிவித்தது. மோடியின் தீவிர பிரச்சாரம்,  பூகம்பத்தால் நொறுங்கிப் போன குஜராத்தை தனது ஆட்சித் திறமையால் தலை நிமிர வைத்த மோடி மீது நாட்டு மக்களுக்கு ஏற்பட்ட நம்பிக்கை,  10 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது.  அந்த தேர்தலில் 336  மக்களவை இடங்களை கைப்பற்றி பாஜக வென்றது, மோடி பிரதமரானார்.

அதைத்தொடர்ந்து 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் பாஜக வெற்றி கண்டது, மோடி இரண்டாவது முறையாக பிரதமராக இருந்து வருகிறார். பிரதமராக 8 ஆண்டு காலம் அவர் நிறைவு செய்துள்ளார். அக்டோபர் 7 ஆம் தேதி ஆகிய இன்றுடன் முதலமைச்சராக  தொடங்கி பிரதமர் வரை தனது தலைமைப் பொறுப்பு பயணத்தில் மோடி 21 ஆண்டுகளை நிறைவு செய்கிறார். அதை நினைவுபடுத்தும் வகையில் 2001 அக்டோபர் 7 , இதேநாளில்  மோடி குஜராத்தில் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது குறிப்பிடதக்கது. 
 

click me!