13 மணிநேரம் அடைக்கப்பட்டது திருப்பதி சன்னிதானம்..! சபரிமலையிலும் தரிசனம் நிறுத்தம்..!

By Manikandan S R SFirst Published Dec 26, 2019, 10:04 AM IST
Highlights

திருப்பதியில் இருக்கும் ஏழுமலையான் கோவில் நேற்று இரவு 11 மணியளவில் மூடப்பட்டது. சூரிய கிரகணம் நிறைவடைந்த பிறகு இன்று மதியம் 2 மணியளவில் தான் திறக்கப்படவுள்ளது. சுமார் 13 மணிநேரம் கோவில் அடைக்கப்படுகிறது.

சூரியன், சந்திரன், மற்றும் பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. சூரியனுக்கும் பூமிக்கும் நடுவே சந்திரன் வந்து சூரியனை பூமியில் இருந்து காணமுடியாதபடி மறைக்கிறது. அதையே சூரியகிரகணம் என்கின்றனர். இந்த நிகழ்வு தற்போது நிகழ்ந்து வருகிறது. இன்று காலை 8.08 மணியில் தோன்றிய சூரிய கிரகணம் 11.19  மணி வரை நீடிக்கின்றது. சந்திரன் முழுமையாக சூரியனை மறைக்கும் நிகழ்வு 9.35 மணி அளவில் தோன்றி 3 நிமிடங்களுக்கு நீடித்தது. அதன்பிறகு நடுப்பகுதியை மட்டுமே சந்திரன் மறைக்க தொடங்கும். அதனால் சூரியனை சுற்றி நெருப்பு வடிவில் வளையம் தோன்றும். இதையே நெருப்பு வளைய சூரியகிரகணம் என்கின்றனர். 

இந்தநிலையில் இன்று சூரிய கிரகணம் நிகழ்வதால் கோவில்களில் அடைக்கப்பட்டுள்ளன. இதன்காரணமாக காலை 5 மணிக்கு கோவில்கள் திறக்கப்பட்டு பூஜைகள் நடந்தது. பின் 7.45 மணியளவில் அடைக்கப்பட்டது. பெரும்பாலான கோவில்கள் இனி மாலை 4 மணிக்கு மேல் தான் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதியில் இருக்கும் ஏழுமலையான் கோவில் நேற்று இரவு 11 மணியளவில் மூடப்பட்டது. சூரிய கிரகணம் நிறைவடைந்த பிறகு இன்று மதியம் 2 மணியளவில் தான் திறக்கப்படவுள்ளது. சுமார் 13 மணிநேரம் கோவில் அடைக்கப்படுகிறது.

முன்னதாக பகல் 12 மணியளவில் திருப்பதி கோவில் திறக்கப்பட்டு ஆகம முறைப்படி சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. பின் கோவில் முழுவதும் தண்ணீர் கொண்டு சுத்தம் செய்யப்பட்டு பரிகார பூஜைகள் நடக்கின்றன. அதன்பிறகே பக்தர்கள் அனுமதிக்கப்பட இருக்கிறார்கள். சபரிமலையில் இன்று நடை அடைக்கப்பட்டுள்ளது. காலை 4 மணிக்கு திறக்கப்பட நடை நெய்யபிஷேகத்திற்கு பிறகு 7 மணியளவில் அடைக்கப்பட்டது. மீண்டும் 12 மணிக்கு பிறகு தான் நடை திறக்கப்பட இருக்கிறது. இதனால் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

click me!