2000 ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறும் திட்டம் எதுவும் இல்லை என, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி திட்டவட்டமாக அறிவித்து இருக்கிறார்.
வதந்திகள்
கருப்பு பணம் ஒழிப்பு நடவடிக்கையாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மத்திய அரசு நாட்டில் புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மத்திய அரசு வாபஸ் பெற்றது.
மாறாக புதிய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் வெளியிடப்பட்டது. இதனையடுத்தே இரண்டாயிரம் ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக பல்வேறு வதந்திகள் பரவியது.
அச்சிடுவது நிறுத்தம்
இந்நிலையில் புதிய 2000 ரூபாய் நோட்டுக்களை புழக்கத்தில் விடுவதையும், புதியதாக அச்சடிப்பதையும் ஆர்பிஐ நிறுத்தலாம் என பாரத ஸ்டேட் வங்கி அறிக்கையில் கூறப்பட்டது.
இதனையடுத்து மத்திய அரசு புதிய 2000 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறுகிறது என தகவல்கள் பரவியது. அதனை மத்திய அரசு மறுத்து உள்ளது.
ஜெட்லி விளக்கம்
இவ்விவகாரம் தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பேசுகையில், “யூகங்கள் உருவாகிவருகிறது. இதுபோன்ற வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது, அவை அனைத்தும் தவறானவை.
இதுதொடர்பாக அதிகாரப்பூர்வமாக தகவல் எதுவும் அரசு தரப்பில் அறிவிக்கப்படாத வரையில் இதனை நம்பவேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்’’ என கூறி உள்ளார்.