மத்தியப் பிரதேசம் ஹோசங்காபாத் நகரைச் சேர்ந்த ஒருவரிடம் இருந்து பர்சை திருடிய திருடன் அதில் தாயின் புகைப்படம் இருப்பதைப் பார்த்து 2 மாதங்களுக்கு பின் உரிமையாளருக்கே திருப்பி அனுப்பிய ருசிகர சம்பவம் நடந்துள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம், ஹோசங்காபாத் நகரைச் சேர்ந்தவர் முகமது அஸ்லாம். இவர் கடந்த ஜூலை 25-ந் தேதி தனது மனைவியின் மருத்துவ சிகிச்சைக்காக டெல்லி சென்று இருந்தார்.
அப்போது, டெல்லியில் மத்கேவாலி களி பகுதியில் தன்னுடைய பர்சை பறிகொடுத்தார். இது தொடர்பாக சதர் பஜார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு பின் கடந்த சில நாட்களுக்கு முன் அஸ்லாமுக்கு ஒருகூரியர் தபால் ஒன்று வந்தது. அதைப் பெற்ற அஸ்லாம் பிரித்துப் பார்த்தபோது, அதில் தான் பறிகொடுத்த பர்ஸ் இருந்தது.
மேலும், பர்ஸில் அவரின் பான்கார்டு, ஏ.டி.எம். கார்டு, ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் இருந்தன. இது கண்டு அஸ்லாம் வியப்படைந்தார்.
மேலும், அந்த பர்ஸில் ஒரு துண்டு காகிதத்தில் பர்ஸ் கிடைத்தவுடன் போன் செய்க என்று எழுதப்பட்டு இருந்தது. அந்த செல்போன் எண்ணுக்கு அஸ்லாம் போன் செய்தார்.
அதன்பின் நடந்த சம்பவம் குறித்து அஸ்லாம் கூறுகையில், “ நான் அந்த எண்ணுக்கு போன்செய்தவுடன் ஒருவர் எடுத்துப் பேசினார். நான் என்னுடைய விவரங்களை அவரிடம் தெரிவித்தேன்.
அதற்கு அவர் உங்களுடைய பர்ஸை நான்தான் திருடினேன். அதில் இருந்த 1200 ரூபாய் எனக்கு தேவைப்பட்டது அதைத் எடுத்துக்கொண்டு அனைத்து ஆவணங்களையும் திருப்பி அளித்துவிட்டேன் என்றார்.
ஏன் திருப்பி கொடுத்தீர்கள் என்று கேட்டேன்?. அதற்கு அந்த நபர், “ நான் உங்களுடைய பர்ஸில்உங்களின் அம்மாவின் புகைப்படத்தைப் பார்த்தேன். நீங்கள் உங்கள் அம்மாவிடம் மிகவும் பாசமாக இருப்பதை அறிந்தேன். நானும் என்னுடைய அம்மாவிடம் மிகவும் பாசமாக இருப்பேன், அவர்களை மிகவும் நேசிப்பேன். அதனால், உங்களின் ஆவணங்களை வைத்திருக்க விருப்பமில்லை. அதனால் ஆவணங்களோடு, உங்களின் அம்மாவின் புகைப்படத்தையும் திருப்பி அனுப்பி இருக்கிறேன் கிடைத்ததா?’’ என்றார்.