மூடநம்பிக்கை தடுப்பு மசோதாவை கொண்டு வர முதல்வர் சித்தராமையா தலைமையிலான கர்நாடகா அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதையடுத்து இந்த மசோதா அடுத்த சட்டமன்ற கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மனிதத் தன்மை அற்ற தீய நடைமுறைகளை தடுக்கும் வகையில் இந்த மசோதா கொண்டுவரப்படுகிறது.
இந்த மசோதா `மனிதத் தன்மை அற்ற, தீய, மூடப் பழக்க வழக்கங்கள் தடுப்பு மசோதா' என்ற பெயரில் கொண்டுவர முன்பு திட்டமிடப்பட்டிருந்தது.
மசோதாவுக்கு ஒப்புதல்
ஆனால் தற்போது இந்த மசோதா, `கர்நாடக தீய, மனிதத் தன்மை அற்ற பழக்கவழக்கங்கள் மற்றும் மாந்திரீக நடைமுறைகள் தடுப்பு, ஒழிப்பு மசோதா' என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு கர்நாடக அமைச்சரவை இப்போது ஒப்புதல் வழங்கியுள்ளது.
இவ்வாறு கர்நாடக சட்டத்துறை அமைச்சர் டி.பி. ஜெயச்சந்திரா தெரிவித்துள்ளார்.
பகுத்தறிவுவாதியான எம்.எம். கல்புர்கி படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து மூடநம்பிக்கை தடுப்பு மசோதாவை கொண்டுவரவேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பகுத்தறிவுவாதிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததை அடுத்து இந்த மசோதாவுக்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது .
நாட்டில் பகுத்தறிவுவாதிகள் மற்றும் முற்போக்கு சிந்தனையாளர்கள் தாக்கப்படுவதும், கொல்லப்படுவதும் அதிகரித்து வரும் நிலையில் , அவர்களை பாதுகாக்கும் வகையில், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கும் வகையில் கொண்டுவரப்படும் இந்த மசோதா கர்நாடக சட்டசபையில் விரைவில் நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.