‘டாக்டர்கள் நக்சலைட்டுடன்  சேரட்டும், சுட்டுக் கொல்கிறோம்’ - மத்திய அமைச்சர் பேச்சால் சர்ச்சை

First Published Dec 26, 2017, 3:51 PM IST
Highlights
The doctors who have vacated the hospital should not join the Naxalite movement


“மருத்துவமனைக்கு வராமல் விடுமுறை எடுத்த டாக்டர்கள், நக்சலைட் இயக்கத்தில் சேரவேண்டும். அதன்பின் அவர்களை சுட்டுக்கொல்கிறோம்’’ என்று மத்திய அமைச்சர் ஹன்ஸ்ராஜ் அஹிர் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அரசு விழா

மஹாராஷ்டிரா மாநிலம், சந்தரபூர் நகரில் அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் இயங்கும் மருந்துக் கடையை மத்திய அமைச்சர் ஹன்ஸ்ராஜ் அஹிர் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.

டாக்டர்கள் விடுமுறை

ஆனால், இந்த விழாவுக்கு மருத்துவமனையில் பணியாற்றும் பல மருத்துவர்கள் பங்கேற்காமல் விடுமுறை எடுத்து விட்டனர். இதைக் கேட்ட அமைச்சர் ஹன்ஸ்ராஜ் அஹிர் மிகுந்த கோபமடைந்தார்.

அமைச்சர் கோபம்

அப்போது அமைச்சர் ஹன்ஸ்ராஜ் அஹிர் அங்கிருந்த அதிகாரிகளிடம், “ ஜனநாயக அமைப்பில் தேர்வு செய்யப்பட்ட அமைச்சர் பங்கேற்கும் விழாவில் டாக்டர்கள் வராமால் இருப்பது முறையா?. மாநகர மேயர் , துணை மேயர் வந்துவிட்டார். ஆனால், இந்த நிகழ்ச்சிக்கு வராமல் டாக்டர்களை தடுத்தது என்ன?

நக்சலைட்டில் சேருங்கள்

நக்சலைட்டுகளுக்கு என்ன தேவை? அவர்களுக்கு ஜனநாயகமே இருக்க கூடாது. இன்று விடுமுறை எடுத்த டாக்டர்களும் நக்சலைட் இயக்கத்தில் சேரட்டும். இவர்களுக்கும் ஜனநாயகம் தேவையில்லைதானே.

சுட்டுக்கொல்கிறோம்

இந்த மருத்துவமனையில் ஏன் பணியாற்றுகிறார்கள்?. ஏன் நோயாளிகளுக்கு மாத்திரைகள் கொடுக்கிறார்கள்?.  நக்சலைட்டுகளுடன் போய் டாக்டர்கள் சேரட்டும், அவர்களுக்கு குண்டுகளை பரிசாக அளித்து சுட்டுக் கொல்கிறோம்’’ என்று பேசினார்.

இந்த வார்த்தைக்கு மருத்துவர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் கடும் கண்டனங்கள் எழுந்தன.

‘நான் டாக்டர்களை மதிக்கிறேன்’

அமைச்சர் ஹன்ஸ்ராஜ் தான் பேசிய வார்த்தைக்கு நேற்று விளக்கம் கூறி பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது-

நான் டாக்டர்கள் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்துள்ளேன். நான் பங்கேற்க வந்திருந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்த டாக்டர் வரவில்லை. அந்த ஒரு டாக்டர் மீதுதான் கோபப்பட்டேன், ஒட்டுமொத்த டாக்டர் மீது அல்ல. என் ஆழ்மனதில் டாக்டர் மீது அதிகமான மரியாதை வைத்து இருக்கிறேன். அன்றைய நிகழ்ச்சிக்கு வராமல் தவிர்த்த டாக்டர்கள் மீது எனது ஆதங்கத்தைதான் தெரிவித்தேன்’’ எனத் தெரிவித்தார்.

click me!