இன்று கம்மத்தில் நடைபெறும் பாரத் ராஷ்டிரிய சமிதி சார்பில் நடைபெறும் பேரணியில் அந்தக் கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ் மற்றும் எதிர்கட்சிகள் ஆட்சியில் இருக்கும் மூன்று மாநில முதல்வர்கள் கலந்து கொள்கின்றனர்.
தெலங்கான சட்டமன்றத் தேர்தல் நடப்பாண்டில் டிசம்பர் மாதத்திற்குள் நடைபெற வேண்டும். இந்த் தேர்தல் பாஜகவுக்கும், ஆளும் பாரத் ராஷ்டிரிய சமிதிக்கும் இடையே ஒரு யுத்தக்களமாகவே இருக்கப் போகிறது என்பது அரசியல் வல்லுனர்களின் கணிப்பு. இந்த தேர்தல் என்னமோ நடப்பாண்டின் இறுதியில்தான் நடக்கவிருக்கிறது. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இந்த இரண்டு கட்சிகளுக்கும் இடையே வாக்குவாதமாக, மோதலாக இருந்து வருகிறது.
சட்டமன்றத் தேர்தல் ஒரு பக்கம் இரண்டு கட்சிகளுக்கும் நெருக்கடி கொடுக்கும் அதே நேரத்தில் மறுபக்கம், 2024 நாடாளுமன்றத் தேர்தலும் இரண்டு கட்சிகளுக்கும் வாழ்வா? சாவா? என்ற பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சமீபத்தில்தான் பாஜகவை தேசிய அளவில் எதிர்கொள்வதற்கு என்று தனது கட்சியை விரிவுபடுத்தினார் கேசிஆர். பாரத் ராஷ்ரிடிய சமிதி என்று பெயரிட்டார்.
இதற்கு முன்னோட்டமாக கடந்த சில மாதங்களாகவே, பாரத் ராஷ்ரிடிய சமிதி தலைவரும், தெலங்கானா முதல்வருமான சந்திரசேகர ராவ் எதிர்கட்சிகள் ஆட்சியில் இருக்கும் மாநில முதல்வர்களை சந்தித்து வருகிறார். இதன் நீட்சியாக இன்று கம்மம் மாவட்டத்தில் பிரம்மாண்ட பேரணிக்கு சந்திரசேகர ராவ் ஏற்பாடு செய்து இருக்கிறார்.
இன்று நடைபெறும் பேரணியில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான், கேரளா முதல்வர் பினராயி விஜயன், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் மற்றும் சிபிஐ பொதுச்செயலாளர் டி ராஜா ஆகியோர் கலந்து கொள்கின்றனர். தனது கட்சியின் பெயரை மாற்றிய பின்னர் கேசிஆர் நடத்தும் பெரிய கட்சிக் கூட்டம் இதுதான். கடந்த 2019ஆம் ஆண்டில் இருந்தே மத்தியை பாஜக, காங்கிரஸ் இல்லாத ஆட்சி அமைக்கப்படும் என்று சந்திரசேகர ராவ் பேசி வந்தாலும், தற்போதுதான் அதற்கான முழு முயற்சியில் இறங்கி இருக்கிறார்.
கடந்த 2014 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதன் முறையாக மற்ற மாநிலங்களின் தலைவர்கள் மற்றும் முதல்வர்களை தனது மாநிலத்தில் நடைபெறும் பேரணிக்கு கேசிஆர் அழைத்து இருக்கிறார். இதற்கு முன்பு ஆந்திராவில் இருந்து தெலங்கானா பிரிவதற்கான போராட்டத்தின்போது அஜித் சிங், சரத் யாதவ், சிபு சோரன் ஆகிய தலைவர்களை ஆந்திரப்பிரதேசத்துக்கு கேசிஆர் அழைத்து இருந்தார்.
SBI PO Exam: SBI PO முதனிலைத் தேர்வு முடிவுகள் வெளியீடு: எப்படி தெரிந்து கொள்வது?
இந்த நிலையில் இன்று கம்மத்தில் நடைபெறும் பிரம்மாண்ட கூட்டத்தில் சுமார் ஐந்து லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கலந்து கொள்வார்கள் என்று பாரத் ராஷ்டிரிய சமிதி தெரிவித்துள்ளது. இந்தப் பேரணி அரசியல் ரீதியாகவும் முக்கியதத்துவம் பெறும் என்று அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதேபோன்ற பிரம்மாண்ட கூட்டத்தை கடந்த 2001 ஆம் ஆண்டில் கேசிஆர் கூட்டி இருந்தார். தெலுங்கானா மாநிலம் அமைய இருந்ததை முன்னிட்டு கரிம்நகரில் சிம்ம கர்ஜனா என்ற பெயரில் நடந்த இந்தக் கூட்டத்தில் 2.5 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டு இருந்தனர்.
தெலுங்கானாவில் மட்டும் இல்லாது, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா, சட்டீஸ்கர், அரியானா, உத்தரப்பிரதேசம், பீகார், இமாசலப் பிரதேசம், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் கட்சியை விரிவாக்கம் செய்வதற்கு கேசிஆர் முதல் கட்டமாக திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.