நவோதயா பள்ளிகளை தொடங்க தமிழக அரசிடம் இருந்து எந்த கோரிக்கையும் வரவில்லை. மாநில அரசு கேட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
மத்திய மனிதவளத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்தனது துறை சார்பில் 2017ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், சாதனைகள் குறித்து நிருபர்களுக்கு விளக்கினார். அப்போது அவர் பேசியதாவது-
கோரிக்கை
தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், நவோதயா பள்ளிகள் தொடங்குவது குறித்து தமிழக அரசு கோரிக்கை ஏதும் மத்திய அரசிடம் வைக்கவில்லை. தமிழக அரசு கோரினால், மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.
அதிகமான அனுமதி
கடந்த காலத்தில் மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் அரசு, பொறியியல் கல்லூரி தொடங்க அனுமதிகோரிய எல்லோருக்கும் அனுமதி வழங்கியது. இதன் காரணமாகத்தான் தமிழகத்தில் 500க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகள் மூடும் நிலைக்கு முக்கிய காரணம்.
தரமான கல்வி
இப்போது நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. தரத்தின் அடிப்படையில்தான் மாணவர்கள் ஒரு கல்லூரியில் சேருகின்றனர். எனவே தரமற்ற, மாணவர் சேர்க்கை இல்லாத கல்லூரிகளை மூட ஏ.ஐ.சி.டி.ஈ. உத்தரவிட்டுள்ளது. தேசிய அளவில் தரமான கல்வியை வழங்க வேண்டும் என்பதே பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் திட்டமாகும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.