
உள்நாட்டில் தயாராகும் சுதேசி பொருட்களை ஊக்குவிக்கும் முயற்சியில், ஏ.ஸி.வகுப்பில் பயணிகளுக்கு வழங்கப்படும் தலையணை, போர்வை ஆகியவற்றை கதர் வாரியத்தில் இருந்து புத்தம் புதியதாக வழங்க ரெயில்வே துறை முடிவு செய்துள்ளது.
பிரதமர் மோடி சமீபத்தில் “மான் கி பாத்” நிகழ்ச்சியில் கதர்வாரிய பொருட்கள் விற்பனையை ஊக்கப்படுத்த அதன் பயன்பாட்டை அதிகப்படுத்த வேண்டுகோள் விடுத்தார்.அதன் தொடர்ச்சியாக ரெயில்வே இந்த நடவடிக்ைகயில் இறங்கியுள்ளது.
இதன்படி ரெயிலில் ஏ.ஸி.வகுப்பில் பயணிக்கும் பயணிகள் அனைவருக்கும் பயணத்தில் புத்தம் புதிய போர்வை, தலையணை, துண்டு போன்றவை டிக்கெட் முன்பதிவின் போதே குறிப்பிட வாய்ப்பு அளிக்கப்படும்.
ரெயில்வே மூலம் வழங்கப்படும் போர்வை, தலையணை, துண்டு சுத்தமில்லாமல் இருப்பதாக பயணிகள் தொடர்ந்து புகார் அளித்து வருவதால், பயணிகளுக்கு ஒவ்வொரு முறையும் புதிதாக வழங்கிட ரெயில்வே முடிவு செய்துள்ளது. பயணம் முடிந்தபின் அந்த பொருட்களை பயணிகள் அவர்களுடன் அதை எடுத்துச் சென்றுவிடலாம்.
இந்த தலையணை, துண்டு, போர்வை அனைத்தையும் கதர்வாரியத்தில் இருந்து குறைந்த விலையில் வழங்கிய ரெயில்வே திட்டமிட்டுள்ளது.
இதன்படி, ஏ.ஸி.வகுப்பில் பயணிக்கும் பயணிகளுக்கு தரமான பருத்தியால் செய்யப்பட்ட போர்வை, தலையனை, துண்டு போன்றவற்றை மிகக்குறைவான ரூ.250 விலையில் வழங்கிட திட்டமிட்டுள்ளது. இவை அனைத்தும் சந்தை விலையில் ரூ.450 வரும் நிலையில் அது பயணிகளுக்காகவும், கதர்பொருட்களை ஊக்குவிக்கும் நோக்கிலும் ரூ.250க்கு தரப்படுகிறது. இதற்கான இறுதி முடிவு இம்மாதத்தில் எடுக்கப்பட்டு , அறிவிப்பு வெளியாகும் என ரெயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.