அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் மனுவை இன்று பரிசீலிக்கும் உச்ச நீதிமன்றம்!

By Manikanda PrabuFirst Published May 7, 2024, 10:28 AM IST
Highlights

டெல்லி முதல்வர் அரவிந்த்  கெஜ்ரிவாலின் ஜாமீன் மனுவை உச்ச நீதிமன்றம் இன்று பரிசீலிக்க உள்ளது

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் அமலாக்கத்துறை, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி கைது செய்தது. அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் மே 7ஆம் தேதி (இன்று) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, டெல்லி திகார் சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, தன்னுடைய கைதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அரவிந்த் ஜெக்ரிவால் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனு மீதான விசாரணை கடந்த முறை வந்தபோது, தேர்தல் காரணமாக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம் என்று அமலாக்கத்துறையிடம் தெரிவித்த உச்ச நீதிமன்றம் மே 7ஆம் தேதிக்கு (இன்று) வழக்கு விசாரணையை தள்ளி வைத்தது.

அதன்படி, தேர்தல் நேரம் என்பதால் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்குவது தொடர்பாகவும், சிறையில் இருந்தபடியே கோப்புகளில் அவர் கையொப்பமிடுவது தொடர்பாகவும் என இரண்டு முக்கிய விஷயங்களை உச்ச நீதிமன்றம் இன்று பரிசீலிக்கவுள்ளது. கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடையும் நிலையில், உச்ச நீதிமன்றமும் அவரது ஜாமீன் குறித்து இன்று பரிசீலிக்கவுள்ளதால் அவருக்கு இடைக்கால நிவாரணம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

MODI : வெயில் அதிகமாக இருக்கு.. அதிக தண்ணீர் குடிங்க.. உடல் நலனில் கவனம் செலுத்தனும்- மோடி அட்வைஸ்

முன்னதாக, கடந்த முறை விசாரணையின் போது, “நாங்கள் இடைக்கால ஜாமீன் வழங்கலாம் அல்லது வழங்காமல் இருக்கலாம். ஆனால் இரு தரப்பும் ஆச்சரியப்படக்கூடாது.” என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு கூறியது.

மேலும், நீதிமன்றம் ஜாமீன் வழங்கும் என்று கருத வேண்டாம் என்று இரு தரப்புக்கும் தெரிவித்த நீதிபதிகள், டெல்லி முதல்வருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டால் அதற்கான நிபந்தனைகள் குறித்து தெரிவிக்குமாறும், முதல்வர் பதவியை கருத்தில் கொண்டு ஏதேனும் கோப்புகளில் கெஜ்ரிவால் கையெழுத்திட வேண்டுமா என்பதை பரிசீலிக்குமாறும் அமலாக்கத்துறைய கேட்டுக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!