
பெண் வக்கீல் வீடு தாக்கப்பட்ட வழக்கில் சசிகலாபுஷ்பா எம்.பி.யை கைது செய்ய தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட சசிகலாபுஷ்பா எம்.பி. மற்றும் அவருடைய குடும்பத்தினர் மீது நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள ஆனைக்குடியை சேர்ந்த 2 பெண்கள் பாலியல் புகார் அளித்தனர். இந்த வழக்கில் புகார் கூறிய பெண்களுக்காக ஆஜரான பெண் வழக்கறிஞர் சுகந்திஜெய்சன் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இதுதொடர்பாக சசிகலாபுஷ்பாவின் ஆதரவாளர்கள் ஹரி, ராமலிங்கம், சித்ராகுமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்கும்படி சசிகலாபுஷ்பா, அவருடைய கணவர் லிங்கேஸ்வர திலகன், மகன் பிரதீப்ராஜா ஆகியோர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
சசிகலாபுஷ்பா மனுவை தள்ளுபடி செய்தும், மற்ற இருவருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கியும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால்உச்சநீதிமன்றத்தில், சசிகலா புஷ்பா, மேல்முறையீடு செய்தார். தலைமை நீதிபதி சி.எஸ்.தாகுர், நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எல்.நாகேஸ்வரராவ் ஆகியோர் முன்னிலையான அமர்வு முன்பு நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்தது.
சசிகலாபுஷ்பா தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் சித்தார்த் லுத்ரா தன்னுடைய வாதத்தில், இந்த சம்பவத்துக்கும் மனுதாரருக்கும் எந்த தொடர்பும் கிடையாது. தற்போது நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறுவதால் எம்.பி.யான மனுதாரர் அதில் கலந்துகொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. எனவே, சென்னைஉயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை ரத்துசெய்ய வேண்டும் என கூறினார்.
இதை தொடர்ந்து நீதிபதிகள் சசிகலாபுஷ்பாவை கைது செய்ய தடை விதிப்பதாகவும், அவருடைய கணவர் மற்றும் மகன் போலீசில் நேரில் ஆஜராகி கையெழுத்து போட தேவையில்லை என்றும் உத்தரவு பிறப்பித்தனர். இதுகுறித்து 4 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீசு பிறப்பிக்கவும் உத்தரவிட்டனர்.
இந்த வழக்கை ஏற்கனவே உள்ள பணிப்பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை வழக்குடன் இணைத்து விசாரிப்பதாகவும் தெரிவித்தனர்.