
வழக்கமான நிலவை விட மிகப்பெரியதாக காட்சி அளிக்கும் ‘சூப்பர் நிலவு’ இன்று வானத்தில் தோன்றுகிறது.
70 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே விண்ணில் ஏற்படும் ‘சூப்பர் நிலவு’ இன்று இரவு தோன்றுகிறது. இதனை நாம் வெறும் கண்களால் பார்க்கலாம். பூமியின் ஒரே துணைக்கோளான நிலா வழக்கத்தை காட்டிலும் சற்று பெரியதாக காட்சி அளிப்பது தான் ‘சூப்பர் நிலவு’.
இந்த அதிசய சம்பவத்தின்போது, வழக்கத்தை விட 14 சதவீதம் நிலவு பெரியதாகவும், 30 சதவீதம் அதிக ஒளியுடனும் பிரகாசமாக தோன்றும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பூமியில் இருந்து சுமார் 3.84 லட்சம் கி.மீ. தொலைவில் உள்ள நிலா, அதன் நீள்வட்ட பாதையில் சுற்றி வருகிறது. ‘சூப்பர் நிலவு’ ஏற்படும்போது 48 ஆயிரம் கி.மீ. தூரம் நிலா பூமிக்கு அருகில் வந்து செல்லும். அதனாலேயே நிலா சற்று பெரியதாகவும், கூடுதல் ஒளியுடனும் காணப்படும் என்று கூறப்படுகிறது.
கடந்த 1948ம் ஆண்டு சூப்பர் நிலவு தோன்றியதாகவும், அதன்பின்னர் இன்று மீண்டும் தோன்றுவதாகவும் நாசா தெரிவித்துள்ளது. அந்த சமயத்தில் நிலா எப்படி இருக்கும்? என்ற படத்தையும் நாசா வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் வானம் தெளிவாக இருக்கும் பட்சத்தில் வெறும் கண்களாலேயே சூப்பர் நிலவை பார்க்கலாம். தொலைநோக்கி மூலமாகவும் பார்த்து ரசிக்கலாம். அதிக ஒளியுடன் இருப்பதால் நிலா சிவப்பு நிறத்தில் தெரியும்.
இன்றைய சூப்பர் நிலவை பார்க்க முடியாவிட்டால் கவலைப்பட வேண்டாம். அடுத்த மாதம் (டிசம்பர்) 14-ந்தேதி மீண்டும் சூப்பர் நிலவு நிகழும். அதனை பார்த்துக்கொள்ளலாம். இதுவும் பெரியதாக தான் இருக்கும். அதனையும் பார்க்காவிட்டால், அடுத்த ஆண்டு (2017) டிசம்பர் மாதம் வரை காத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.