‘200 கோடி சொத்து..ரோல்ஸ் ராய்ஸ் கார்.. வசமாக சிக்கிய சுகேஷ் - நடிகை ஜாக்குலின்..’ பின்னணி என்ன ?

By Raghupati RFirst Published Dec 6, 2021, 11:44 AM IST
Highlights

பண மோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர், பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு, 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குதிரை, 9 லட்சம் மதிப்புள்ள பூனை உள்ளிட்ட 10 கோடி ரூபாய் மதிப்பிலான பரிசுகளை அளித்துள்ளதாக அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.இதனால் நடிகை ஜாக்குலின் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ‘இரட்டை இலை’ சின்னத்தை பெற்றுக் கொடுப்பதற்காக ரூ.50 கோடி லஞ்சம் கொடுத்ததாக சுகேஷ் சந்திரசேகர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அகில இந்திய அளவில் அரசியல் புரோக்கராக செயல்பட்டு வந்த சுகேஷ் சந்திரசேகர் இந்த பணத்தை லஞ்சமாக பெற்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதன் பேரில், டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் வைத்து கடந்த 2019-ம் ஆண்டு சுகேஷ் சந்திரசேகரை போலீசார் கைது செய்தனர். பின்னர் திகார் ஜெயிலில் அவர் அடைக்கப்பட்டார். இந்த சம்பவத்தை அடுத்து அமலாக்கப்பிரிவு போலீசாரும் சுகேஷ் சந்திரசேகர் மீது தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

அப்போது சுகேஷ் சந்திரசேகர் சட்ட விரோதமாக இது போன்று பல வழிகளில் பணப்பரிமாற்றம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சுகேஷ் சந்திரசேகர் மீதான பிடி இறுகியது. பெங்களூரை சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் அனைத்து அரசியல் கட்சியினருடனும் நெருங்கிய தொடர்பை வைத்துக் கொண்டு,  அதன் மூலம் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தது கண்டுபிடிக்கப்பட்டது. சென்னையைச் சேர்ந்த இரண்டு தொழில் அதிபர்களிடம்,  லட்சக்கணக்கில் மோசடி செய்ததாகவும் சுகேஷ் சந்திரசேகர் மீது குற்றச்சாட்டு உள்ளது. சுகேஷ் சந்திரசேகருடன் சேர்ந்து பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக அவரது காதலியும், நடிகையுமான ஜாக்குலின் பெர்னாண்டஸ் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.இவர் பாலிவுட்டில் பிரபலமான நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.  

இந்தநிலையில் சுகேஷ் சந்திரசேகரின் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக கோடிக்கணக்கில் பணத்தை சம்பாதித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததும், தனது காதலியான ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு ஆடம்பர பரிசுகளை வழங்கி பரிசு மழை பொழிந்துள்ளதும் தெரிய வந்துள்ளது. அமலாக்கத்துறை சார்பில் 7 ஆயிரம் பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

அதில், இது தொடர்பாக விரிவான தகவல்கள் இடம் பெற்றுள்ளன.அதில், ‘காதலி ஜாக்குலின் பெர்னாண்டஸ் எப்போதும் பல்வேறு வகையான பரிசுகளை வழங்குவதை சுகேஷ் சந்திரசேகர் வழக்கமாகவே வைத்து இருந்தார். அந்த வகையில் காதலி ஜாக்குலினுக்கு சுகேஷ் சந்திரசேகர் ரூ.50 லட்சம் மதிப்பிலான குதிரையை வாங்கி பரிசளித்துள்ளார். அதனை பார்த்து அவர் வியந்து போயுள்ளார். இதேபோல் ஜாக்குலினுக்கு பூனைக்குட்டிகள் மீது அதிக பாசம் இருந்துள்ளது. அவைகளை வீட்டில் வாங்கி வளர்ப்பதிலும் அவர் அதிக ஆர்வம் காட்டி உள்ளார்.

இதையடுத்து காதலியை சந்தோ‌ஷப்படுத்தும் வகையில் ரூ.9 லட்சம் மதிப்புள்ள பாரசீக பூனைக்குட்டியையும் பரிசளித்துள்ளார். இதுதவிர விலை உயர்ந்த ஆடம்பர பொருட்களையும் காதலிக்கு சுகேஷ் சந்திரசேகர் பரிசாக வாரி வழங்கி இருக்கிறார். அதில் பல கார்களும் அடங்கி உள்ளன. நாடு முழுவதும் பல்வேறு வழிகளில் ரூ.200 கோடி அளவுக்கு முக்கிய பிரமுகர்களிடம் இருந்து சுகேஷ் சந்திரசேகர் லஞ்சமாக பணம் பெற்று இருப்பதாகவும் அமலாக்கத் துறையின் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு பணி நியமனம், இடமாற்றம் உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்காக பலர் சுகேஷ் சந்திரசேகரை அணுகி பணத்தை வாரி வழங்கி உள்ளனர்.

சுகேஷ் சந்திரசேகர் மும்பை, டெல்லி, சென்னை போன்ற இடங்களுக்கு அடிக்கடி விமான பயணங்களை மேற்கொண்டுள்ளார். மும்பையில் இருந்து டெல்லிக்கும், டெல்லியில் இருந்து சென்னைக்கும் பல முறை விமான டிக்கெட்டுகளை பதிவு செய்து பயணித்துள்ளார். இதற்காக ரூ.8 கோடி அளவுக்கு அவர் செலவிட்டு இருக்கும் திடுக்கிடும் தகவலும் தெரிய வந்துள்ளது.

சுகேஷ் சந்திரசேகரிடம் கோடீஸ்வரர்களை மிஞ்சும் அளவுக்கு விலை உயர்ந்த பெராரிஸ், பென்ட்லீஸ், மெர்சிடிஸ், பி.எம்.டபிள்யூ, லேண்ட் ரோவர்ஸ் வகை உள்பட 16 வகையான கார்கள் இருந்ததும் தெரிய வந்துள்ளது. வி.ஐ.பி.க்கள் மட்டுமே வாங்கக் கூடிய ரோல்ஸ் ராய்ஸ் காரையும் சுகேஷ் சந்திரசேகர் வைத்து இருக்கிறார்.

இந்த காரின் மதிப்பு ரூ.10.45 கோடி ஆகும். சமூகத்தில் உயர் அந்தஸ்தில் இருக்கக் கூடியவர்கள் மட்டுமே வாங்கக்கூடிய இந்த காரை சுகேஷ் சந்திரசேகர் பயன்படுத்தி இருக்கிறார். இதுதவிர லம்போகினி கார் ஒன்றையும் வைத்து இருந்துள்ளார். இதுபோன்று விலை உயர்ந்த பல கார்களை பயன்படுத்திய சுகேஷ் சந்திரசேகர் சென்னை கானாத்தூரில் கடற்கரையை ஒட்டியுள்ள பிரமாண்டமான சொகுசு பங்களாவில் அவற்றை நிறுத்தி வைத்து இருந்ததும் தெரிய வந்துள்ளது. இந்த சொகுசு பங்களாவில் பல்வேறு ஆடம்பர வசதிகள் இருந்ததும் அமலாக்கத்துறை விசாரணை முடிவில் தற்போது தெரிய வந்து இருக்கிறது.

கானாத்தூரில் உள்ள சொகுசு பங்களா ரூ.10 கோடி மதிப்புடையது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பங்களாவை சுகேஷ் சந்திரசேகர் பார்த்து பார்த்து வடிவமைத்துள்ளார். அந்த அளவுக்கு ‘லக்சுரி’ பங்களாவாக அது காட்சி அளிக்கிறது. விலை உயர்ந்த இத்தாலியன் மார்பிள்கள் அங்கு பதிக்கப்பட்டுள்ளது. பங்களாவுக்குள்ளேயே மினி பார், தியேட்டர், ஜிம் ஆகியவையும் செயல்பட்டு வந்துள்ளது. வீட்டில் உள்ள அறைகளில் மிகவும் விலை உயர்ந்த வேலைப்பாடுகளுடன் கூடிய கட்டில், மெத்தைகளை சுகேஷ் சந்திரசேகர் வாங்கிப் போட்டுள்ளார்.

அங்குள்ள அறைகளில் சோபாக்களும் கண்ணைக் கவரும் வகையில் விலை உயர்ந்ததாகவே இருந்துள்ளது. தகதகவென மின்னும் அளவுக்கு பங்களாவில் விளக்கு வசதியும் மேற்கொள்ளப்பட்டு இருந்தது. இதன் மூலம் அனைத்து அறைகளுமே தங்கம் போல் ஜொலித்ததும் தெரிய வந்துள்ளது. படுக்கை அறைகளை ஒட்டியும் சுகேஷ் சந்திரசேகர் ஜிம் அமைத்துள்ளார். அங்கு மிகப்பெரிய டி.வி.யும் பொருத்தப்பட்டு விலை உயர்ந்த சோபா இருக்கைகள் ஆகியவையும் போடப்பட்டு இருந்தன. இதன் மூலம் மிகப்பெரிய கோடீஸ்வரர்களையே மிஞ்சும் அளவுக்கு சுகேஷ் சந்திரசேகர் வாழ்ந்து இருப்பது தெரிய வந்துள்ளது.

மேலும், மும்பையில் இருந்து மஸ்கட் செல்லவிருந்த நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மும்பை விமான நிலையத்தில் குடியேற்ற அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். அவர் மீது பதியப்பட்டுள்ள ரூபாய் 200 கோடி பணம் மோசடி வழக்கில் ஜாக்குலினுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில், அவர் வெளிநாடு செல்வதற்கு அனுமதி இல்லை என்று கூறி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார் என்று விமான நிலைய தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

click me!