
ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தத்தில் சட்டவிரோத நடவடிக்கை மூலம் பெரிய அளவில் கருப்புப் பணம் குவித்த கார்த்தி சிதம்பரம், 21 வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு தொடங்கியதாக, சுப்பிரமணிய சுவாமி குற்றம் சாட்டினார்.
உண்மையான குற்றவாளி
நேற்று டெல்லியில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்த அவர் இது குறித்து மேலும் கூறியதாவது-
‘‘ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தத்தில் ‘மாறன் சகோதரர்’கள் மீது குற்றம்சாட்டப்பட்டது, ஆனால் உண்மையான குற்றவாளி சிதம்பரம்தான். இது தொடர்பான ஆவணங்கள் என்னிடம் உள்ளன.
ரூ.120 லட்சம் கோடி
“சட்ட விரோத ஒப்பந்தத்திற்கு ப.சிதம்பரம் அனுமதி அளித்தார். இதன்படி மலேசிய நிறுவனம் ஏர்செல் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளை வாங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், 74 சதவீத பங்குகளைத்தான் வாங்க அனுமதிக்க முடியும்.
கார்த்தி சிதம்பரத்தினால் 21 வெளி நாட்டு வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டன. இதில் ரூ.6 லட்சம் கோடி திரண்டுள்ளது, மொத்தத்தில் அயல்நாட்டு வங்கிகளில் உள்ள தொகை ரூ.120 லட்சம் கோடியாகும்.
அனுமதி இல்லை
கார்த்தி சிதம்பரத்தை நிதிமுறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரிக்க வேண்டும் என்று விசாரணை அமைப்புகள் கோரின, ஆனால் அதற்கான அனுமதி வழங்கப்படவில்லை.
2014-ல் கருப்புப் பணத்தை மீண்டும் நாட்டுக்குக் கொண்டு வருவோம் என்று கூறினோம், இது குறித்து விசாரணை முகமைகள் நிறைய ஆதாரங்களையும் தரவுகளையும் திரட்டின.
கருப்புப் பணம் விவகாரம்
கருப்புப் பண விவகாரத்தில் பிரதமர் மோடியை குறை கூறுவது எளிது. ஆனால் ஆட்சியதிகாரம் இதில் ஒத்துழைப்பு அளிக்கவில்லையெனில் நடவடிக்கை கடினமே.”
இவ்வாறு சுப்பிரமணியசாமி கூறினார்.
இந்தக் குற்றச்சாட்டை கார்த்தி சிதம்பரம் உடனடியாக மறுத்து இருக்கிறார்.
இது குறித்த தனது டுவிட்டர் பதிவில் “என்னைப் பற்றி மிகவும் அவதூறான சில குற்றச்சாட்டுகள் பரப்பப்படுகின்றன. என்னுடைய மற்றும் எனது குடும்ப சொத்து விவரம் குறித்த கணக்கு வழக்குகள் சட்டத்திற்கு இணங்க மிகச் சரியாக தாக்கல் செய்யப்பட்டு உள்ளது’’ என தெரிவித்து இருக்கிறார்.