
சமீபத்தில் அகமதாபாத்தில் நூற்றுக்கணக்கான உயிர்களைப் பலிகொண்ட ஏர் இந்தியா விமான விபத்து குறித்து இலங்கையைச் சேர்ந்த பாதிரியார் ஜெரோம் பெர்னாண்டோ முன்பே அளித்த எச்சரிக்கைகள் இப்போது பரவலாகப் பேசப்பட்டு வருகின்றன. அவர் இந்த விமான விபத்து குறித்து பலமுறை முன்னெச்சரிக்கை விடுத்ததாகக் கூறப்படுகிறது.
கடந்த வியாழக்கிழமை அகமதாபாத்திலிருந்து லண்டன் நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் (AI171) புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் குறைந்தது 240 பேர் உயிரிழந்தனர். விமானம் விழுந்த மருத்துவமனை விடுதி கட்டடம் மற்றும் அதற்கு அருகில் உள்ள பகுதிகளிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதிரியாரின் எச்சரிக்கைகள்:
இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்த பிறகு, இலங்கையைச் சேர்ந்த பாதிரியார் ஜெரோம் பெர்னாண்டோவின் பழைய வீடியோக்கள் பகிரப்பட்டு வருகின்றன. பாதிரியார் ஜெரோம் முந்தைய பிரசங்கங்கள் மற்றும் சமூக ஊடகப் பதிவுகளில் இந்திய விமானப் போக்குவரத்துத் துறையில் ஏற்படக்கூடிய பேரழிவுகள் குறித்து எச்சரித்திருந்ததாக அவரது ஆதரவாளர்கள் கூறிவருகின்றனர்.
குறிப்பாக, “விமானம் நடுவானில் ஆபத்தில் சிக்க வாய்ப்பு உள்ளது” என்றும், "சிவப்பு நிற விமானத்தில் செல்வதைத் தவிர்த்துவிடுங்கள்" என்றும் அவர் குறிப்பிட்டதாகத் தெரிகிறது. அவரது இந்த எச்சரிக்கைகள் அப்போது பெரிதாக எடுத்துக்கொள்ளப்படவில்லை என்றும், இப்போது விபத்து நடந்த பிறகுதான் அதன் முக்கியத்துவம் உணரப்படுவதாகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தற்செயல் நிகழ்வு
ஆனால், சிலர் இந்தப் பதிவுகளுக்கு எதிராகவும் பதில் அளித்து வருகிறார்கள். இது வெறும் தற்செயல் நிகழ்வு என்றும், இதுபோன்ற துயரச் சம்பவங்களை பயன்படுத்தி தனிப்பட்ட பிரபலத்தைப் பெற முயற்சிப்பதாகவும் விமர்சித்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த மத்திய அரசு உயர்மட்ட விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. இந்தக் குழு விரிவான விசாரணை நடத்தி 3 மாதங்களில் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளது. ஏர் இந்தியாவின் தாய் நிறுவனமான டாடா குழுமம், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு மற்றும் காயமடைந்தவர்களுக்கு முழு மருத்துவச் செலவு காப்பீட்டை அறிவித்துள்ளது. இடைக்கால நிவாரணமாக ரூ.25 லட்சம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.