பிரதமர் மீது இவ்வளவு பக்தியா.. ஆந்திரா TO டெல்லிக்கு யாத்திரை.. 2000 கி.மீ நடந்தே செல்லும் மோடி பக்தர்.

By Ezhilarasan BabuFirst Published Aug 9, 2022, 2:14 PM IST
Highlights

பிரதமர் மோடியின் தீவிர தொண்டர் ஒருவர் ஆந்திர மாநிலத்தில் இருந்து டெல்லிக்கு பாதயாத்திரையாக சென்று அவரின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்க உள்ளார். தற்போது அவரின் நடைபயணம் வெற்றிகரமாக மகாராஷ்டிர மாநிலத்தை அடைந்துள்ளது. அதற்கான புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

பிரதமர் மோடியின் தீவிர தொண்டர் ஒருவர் ஆந்திர மாநிலத்தில் இருந்து டெல்லிக்கு பாதயாத்திரையாக சென்று அவரின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்க உள்ளார். தற்போது அவரின் நடைபயணம் வெற்றிகரமாக மகாராஷ்டிர மாநிலத்தை அடைந்துள்ளது. அதற்கான புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த 2014ஆம் ஆண்டு மோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைத்தது முதல் பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது, பல திட்டங்கள் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்று வரும் அதே நேரத்தில், ஒரு சில திட்டங்கள் சில மாநிலங்களில் எதிர்க்கப்படுகிறது. ஆனாலும் சர்வதேச அளவில் ஒரு வலிமை மிக்க தேசமாக இந்தியாவை மோடி தலைமையிலான அரசு கட்டி எழுப்பியுள்ளது என்பதை எவரும் மறுக்க முடியாது. 

இது ஒருபுறம் உள்ள நிலையில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் பாஜகவே மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றும் என பாஜகவினர் கூறி வருகின்றனர். முழுக்க முழுக்க மோடி என்ற ஆளுமையின் கீழ் பாஜக அசைக்க முடியாத சக்தியாக மாறியுள்ளது என்பதுடன், சர்வதேச அளவில் சக்தி வாய்ந்த தலைவராக மோடி தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார் என்பதுமே பாஜகவினர் கூறும் காரணமாக உள்ளது.

இதையும் படியுங்கள்: nitish: bihar: பீகாரில் நிதிஷ் பாஜக கூட்டணி உடைந்தது:ஆர்ஜேடியுடன் கூட்டு? தேஜஸ்வி துணை முதல்வர்

இந்த வரிசையில் நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் மோடியின் தொண்டர்கள் என்பதையும் தாண்டி பலர் அவரது ரசிகர்களாகவும் உள்ளனர் இன்னும் பலர் அவரது தீவிர பக்தர்களாகவே மாறியுள்ளனர். அந்த வகையில் ஆந்திர  மாநிலம் பத்வேலேச் சேர்ந்த  மோடியின் பக்தர் ஒருவர் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி மோடியின் பிறந்தநாள் என்று அவருக்கு டெல்லியில் வாழ்த்து தெரிவிக்க யாத்திரை மேற்கொண்டுள்ளார். கடந்த ஜூலை 17ஆம் தேதி ஆந்திர மாநிலத்தில் இருந்து அவரது யாத்திரை தொடங்கியது, இந்நிலையில் 2000 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து அவர் டெல்லியில் பிரதமர் மோடியின் பிறந்த நாளன்று அவரை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க உள்ளார். 

அவரின் பெயர் பத்திபதி நரசிம்ம ஹரி ஆகும், தனது சொந்த ஊரில் விவசாயம் செய்து வரும் இவர் உள்ளூரில் ஹோட்டல் ஒன்றில் மேலாளராகவும் பணிபுரிந்து வருகிறார். பிரதமர் மோடியின் திட்டங்கள் மற்றும் அவரின் நிர்வாகத் திறமையால் ஈர்க்கப்பட்ட இவர் பிரதமர் மோடிக்கு தனது அன்பை வெளிப்படுத்தும் வகையில் அவரின் பிறந்தநாளுக்கு வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற முனைப்பில் இந்த யாத்திரையை மேற்கொண்டுள்ளார்.

இதையும் படியுங்கள்: மகாராஷ்டிரா அமைச்சரவை 40 நாட்களுக்குப் பின்னர் இன்று விரிவாக்கம்; 18 அமைச்சர்கள் பதவியேற்பு!!

தேசத்தின் அன்பிற்குரிய தலைவரை வாழ்த்துவதற்காக இந்த யாத்திரையை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் மகிழ்ச்சி பட தெரிவித்துள்ளார், ஏற்கனவே இந்தியா 75வது சுதந்திர தின விழா உற்சாகமாக கொண்டாட தயாராகி வரும் நிலையில் பிரதமர் மோடிக்காக தான் மேற்கொண்டுள்ள யாத்திரை மூலம்  தனது பங்கும் இந்த கொண்டாட்டத்தில் இடம்பெற்றுள்ளது என்பதை எண்ணி பெருமைப்படுவதாகவும் கூறியுள்ளார். நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி சொல்ல விரும்புவதாகவும், ராமராஜ்யம் அமைக்கும் கனவு பல ஆண்டுகளாக இருந்தாலும் பிரதமர் மோடியார் மட்டுமே ராமர் கோவிலை கட்ட முடிந்தது என்றும் அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

ஆந்திராவிலிருந்து தனது யாத்திரையை தொடங்கியுள்ள அவர் தற்போது வெற்றிகரமாக மகாராஷ்டிரா மாநிலம் ஹிங்கன் காட் பகுதியை அடைந்துள்ளார்.   நாளொன்றுக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் தூரம் அவர் பயணிக்கும் அவரை, தனது பயணத்திற்காக எந்தவித  திட்டங்களோ, முன்னேற்பாடுகளோ இன்றி இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார் என்பது தனிச் சிறப்பு, நகரங்களில் பாஜக அலுவலகம், ஆர்எஸ்எஸ் தலைவர்கள் அவரின் உணவு மற்றும் தங்கும் இடங்களை கவனித்து வருகின்றனர். 

அப்படி இல்லாத பட்சத்தில் வழியில் உள்ள உணவகங்களில் சாப்பிட்டு, கோவில் அல்லது பெட்ரோல் பங்குகளில் இரவு தங்கி தனது பயணத்தை வெற்றிகரமாக மேற்கொண்டு வருகிறார். விரைவில் அவர் பிரதமர் மோடியின் பிறந்த நாளன்று அவர் டெல்லியை அடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பத்திபதி நரசிம்ம ஹரியின் இந்த முயற்சியை பாஜகவினர், மோடி ஆதரவாளர்கள் வெகுவாக பாராட்டி வரவேற்று வருகின்றனர். 
 

click me!