ஜே.என்.யு-வில் மறுபடியும் பஞ்சாயத்து.. மோடி, ஷாவுக்கு எதிராக முழக்கம்! ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்!!

Published : Jan 06, 2026, 06:33 PM ISTUpdated : Jan 06, 2026, 06:41 PM IST
JNU slogan controversy

சுருக்கம்

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (JNU) உமர் காலித்தின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவுக்கு எதிராக மாணவர்கள் முழக்கமிட்டனர்.

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (JNU) பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக ஆவேசமான முழக்கங்கள் எழுப்பப்பட்ட வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இது தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகம் டெல்லி காவல்துறையில் புகார் அளித்துள்ளது.

உமர் காலித் ஜாமீன் மறுப்பு

கடந்த 2020-ஆம் ஆண்டு ஜே.என்.யு வளாகத்தில் முகமூடி அணிந்த நபர்கள் புகுந்து தாக்குதல் நடத்தியதன் ஆறாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி ஜனவரி 5-ஆம் தேதி நடைபெற்றது. அதே நாளில், 2020 டெல்லி கலவர வழக்கில் சிறையில் இருக்கும் உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம் ஆகியோரின் ஜாமீன் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்தத் தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து, பல்கலைக்கழக வளாகத்தில் திரண்டிருந்த மாணவர்கள் சிலர் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியதாகக் கூறப்படுகிறது.

 

 

புகாரும் விளக்கமும்

இந்தச் சம்பவம் குறித்து ஜே.என்.யு பாதுகாப்புத் துறை டெல்லி போலீஸாருக்குக் கடிதம் எழுதியுள்ளது. அதில், "மாணவர்களின் முழக்கங்கள் உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் இருந்ததோடு, பொது அமைதிக்கும் நாட்டுக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் இருந்தன" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக எஃப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்யுமாறு கோரப்பட்டுள்ளது.

ஜே.என்.யு மாணவர் சங்கத் தலைவர் அதிதி மிஸ்ரா இது குறித்துக் கூறுகையில், "நாங்கள் எழுப்பிய முழக்கங்கள் சித்தாந்த ரீதியானவையே தவிர, யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்கவில்லை. 2002 கலவரங்களுக்குப் பொறுப்பான பாசிச சித்தாந்தம் இந்த நாட்டில் முடிவுக்கு வர வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்" எனத் தெரிவித்தார்.

அரசியல் போர்

இந்தச் சம்பவம் டெல்லி அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், "ராகுல் காந்தி, கம்யூனிஸ்டுகள் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் போன்றவர்களால் ஜே.என்.யு 'துக்டே துக்டே' கும்பலின் கூடாரமாக மாற்றப்பட்டுள்ளது. இவர்கள் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்ய வேண்டும்," என்று சாடியுள்ளார்.

"இத்தகைய முழக்கங்களை எழுப்புபவர்கள் ஆர்.எஸ்.எஸ் அல்லது பாஜகவைச் சேர்ந்தவர்களாகத்தான் இருப்பார்கள்; இது மக்களைத் திசைதிருப்பும் ஹிட்லர் பாணி அரசியல்," என காங்கிரஸ் தலைவர் ரஷீத் ஆல்வி குற்றம் சாட்டியுள்ளார்.

சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு அஃப்சல் குரு தூக்குத் தண்டனை தொடர்பாக எழுந்த சர்ச்சையைப் போலவே, தற்போதைய நிகழ்வும் ஜே.என்.யு-வை மீண்டும் தேசிய அளவில் விவாதப் பொருளாக்கியுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

டவர் தேடி ஓட வேண்டியது இல்ல! இனி ஹைவேஸிலும் சிக்னல் கிடைக்கும்! மத்திய அரசு அதிரடி உத்தரவு!
கோயிலில் சன்னி லியோன் பாட்டுக்கு குத்தாட்டம்.. ரீல்ஸ் வீடியோ போட்ட ஊழியர்கள் டிஸ்மிஸ்!