தாடியை ஷேவ் செய்யுங்கள்... பிரதமர் மோடிக்கு 100 ரூபாயை அனுப்பிய டீக்கடைக்காரர்..!

By Asianet TamilFirst Published Jun 9, 2021, 9:48 PM IST
Highlights

பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய தாடியை ஷேவ் செய்வதற்கு, அவருக்கு 100 ரூபாயை மகாராஷ்டிராவைச் சேர்ந்த டீக்கடைக்காரர் அனுப்பியுள்ளார். 
 

மகாராஷ்டிரா மாநிலம் பாரமதியைச் சேர்ந்தவர் டீ கடைக்காரர் அனில் மோர். இவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு 100 ரூபாயை மணியார்டர் மூலம் அனுப்பியுள்ளார். பிரதமர் நிவாரண நிதிக்காக அவர் இதை அனுப்பியிருப்பார் என்று பலரும் நினைத்தார்கள். ஆனால், பிரதமர் அவருடைய தாடியை ஷேவ் செய்துகொள்ளவே இந்தப் பணத்தை அனுப்பியுள்ளது தெரிய வந்துள்ளது. 
பிரதமர் மோடிக்கு தான் ஏன் பணம் அனுப்பினேன் என்பது குறித்து அனில் மோர் விளக்கம் அளித்துள்ளார். அதில், “பிரதமர் மோடியின் தாடியை நன்கு வளர்ந்துள்ளது. பிரதமர் எதையாவது வளர்க்க வேண்டும் என்றால், அது நாட்டு மக்களுக்கான வேலைவாய்ப்பாக இருக்க வேண்டும் அல்லது மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான முயற்சிகளுக்காக இருக்க வேண்டும். நாட்டில் தற்போதுள்ள மருத்துவ வசதிகளை அதிகரிக்க முயற்சிகள் எடுக்க வேண்டும். கொரோனா இரண்டு அலைகளால் அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கங்களால் மக்கள் தங்களுக்கு ஏற்பட்ட துயரங்களிலிருந்து விடுபடுவதை பிரதமர் உறுதிப்படுத்த வேண்டும். 
பிரதமர் பதவி நாட்டின் மிக உயர்ந்த பதவி. நமது பிரதமர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. அவர் தாடியை ஷேவ் செய்வதற்காக எனது சேமிப்பில் இருந்து 100 ரூபாயை அனுப்புகிறேன். அவர் மிகப் பெரிய பதவியில் உள்ள தலைவர். நான் அவரை காயப்படுத்தவில்லை. கொரோனா எனும் தொற்றுநோயால் ஏழை மக்களின் பிரச்னைகள் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் சூழலில், இது அவருடைய கவனத்தை ஈர்க்கும் ஒரு வழி.” என்று அனில் மோர் தெரிவித்துள்ளார். மேலும் அவர்,  ‘கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிதியுதவியும், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ. 30 ஆயிரம் நிதியுதவியும் வழங்க வேண்டும்” என்றும் அனில் மோர் பிரதமர் மோடிக்குக் கடிதமும் அனுப்பியுள்ளார்.

click me!