Omicron : அச்சுறுத்தும் ஒமைக்ரான் வைரஸ்… மும்பையில் டிச.15 வரை பள்ளிகளுக்கு விடுமுறை!!

By Narendran SFirst Published Nov 30, 2021, 9:24 PM IST
Highlights

மும்பையில் கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டு நாளை பள்ளிகள் திறக்ப்படவிருந்த நிலையில் ஒமைக்ரான் என்னும் புதிய வைரஸ் குறித்த அச்சம் காரணமாக டிசம்பர் 15 ஆம் வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

மும்பையில் கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டு நாளை பள்ளிகள் திறக்ப்படவிருந்த நிலையில் ஒமைக்ரான் என்னும் புதிய வைரஸ் குறித்த அச்சம் காரணமாக டிசம்பர் 15 ஆம் வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கடந்த 24 ஆம் தேதி ஓமைக்ரான் வகை வைரஸ் முதல் முறையாக கண்டறியப்பட்டது. உலக சுகாதார அமைப்பால் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் பின்னர் ஹாங்காங், போட்ஸ்வானா, இஸ்ரேல் நாடுகளிலும் கண்டறியப்பட்டது. இந்த ஓமைக்ரான் வகை வைரஸ் இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களில் மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாகவும், தடுப்பூசியை அதிகமாக எதிர்க்கும் தன்மை கொண்டதாகவும் அறிகுறிகளும் தீவிரத்தன்மை கொண்டதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் ஓமைக்ரான் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளன. இதுவரை உருமாறிய கொரோனா வைரஸ்களில் டெல்டா வகை வைரஸ் அதிக ஆபத்தானது என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அதை விட வீரியமானது இந்த ஓமைக்ரான் வகை வைரஸ் என்று கூறப்படுகிறது.  இது 32 முறை உருமாற்றமடைந்து ஓமைக்ரானாக பரவி வருவதாக கூறப்படுகிறது.

ஆப்பிரிக்க நாடுகளில் பரவ ஆரம்பித்த இந்த ஒமைக்ரான், தற்போது பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கும் பரவியுள்ளது. இதனால் அச்சமடைந்த உலக நாடுகள் ஆப்பிரிக்க நாடுகள் இடையேயான போக்குவரத்தை ரத்து செய்துள்ளன. மேலும் சில நாடுகள் அந்நாட்டிலிருந்து வருபவர்களை தீவிரமாக கண்காணிக்கின்றன. இந்தியாவில் இதுவரை யாரும் ஒமைக்ராவால் பாதிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. இருந்த போதிலும் பரவாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும் மக்களை எச்சரிக்கையாக இருக்குமாறும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் தென் ஆப்ரிக்கா, சிங்கப்பூர், சீனா, பிரேசில், போத்ஸ்வானா, மொரீஷியஸ்,  இஸ்ரேல், ஹாங்காங், ஜிம்பாப்வே உள்ளிட்ட நாடுகள் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ள காரணத்தால் இந்த நாடுகளிலிருந்து இந்தியா வருகை தரும் பயணிகள், பயணத்திற்கு முன்பே கொரோனா நெகட்டிவ் சான்றிதழை சவிதா இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் விமான நிலையத்தில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்படும் என்றும் பரிசோதனை முடிவு வரும் வரை அவர் விமான நிலையத்திலேயே தங்கி இருக்க வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனாவிற்கு கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசி 50 பிறழ்வுகளை கொண்ட புதிய வைரஸின் மீது செயல்படுமா என்ற சந்தேகம் ஆய்வாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்தியாவிலும் ஒமைக்ரான் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் துரிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மும்பையில் கொரோனா ஊரடங்கு முடிந்து டிசம்பர் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட இருந்தது. ஆனால், ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக டிசம்பர் 15 ஆம் தேதி வரை பள்ளிகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி 1 முதல் 7 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு டிசம்பர் 15 ஆம் தேதி வரை பள்ளிகள் மூடப்படுவதாக மும்பை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

click me!