புதுவை ECR சாலையில் மறியல்: 2 கி.மீ. அணிவகுக்கும் வாகனங்கள்

By Dinesh TGFirst Published Sep 30, 2022, 1:03 PM IST
Highlights

புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட மின்தடை காரணமாக காலாப்பட்டு கிழக்கு கடற்கரை சாலையில் பொதுமக்கள் பல மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

புதுச்சேரியில் மின்துறை தனியார் மயமாக்கலுக்கான டெண்டர் விடுக்கப்பட்டதை கண்டித்து புதுச்சேரி மின்துறை பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று மூன்றாவது நாளாக போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மின்துறை பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் போராட்டம் காரணமாக நகர மற்றும் கிராம பகுதிகளில் மின்தடை ஏற்பட்டு பெருமளவில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் ஆங்காங்கே பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

Modi Kabaddi league: வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.30 லட்சம் பரிசு வழங்கிய அண்ணாமலை

இந்நிலையில் இன்று காலை காலாப்பட்டு கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மீனவ கிராம மக்கள் மின்தடை காரணமாக கிழக்கு கடற்கரை சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். பல மணி நேரமாக நடைபெற்ற மறியல் போராட்டம் காரணமாக இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு மேலாக பேருந்துகள் நின்றதால் பெரும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மின்சாரம் வந்தால் மட்டுமே சாலை மறியல் கைவிடப்படும் என அறிவித்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பயணிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர்.

Rssம், நாங்களும் ஒன்னா? திருமாவளவன் ஆவேசம்

இதே போல் கோரிமோடு பகுதிகளிலும் மின்தடை காரணமாக பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மின்வாரிய ஊழியர்களின் தொடர் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக கடந்த மூன்று நாட்களாக புதுச்சேரியின் பல பகுதிகளிலும் மின்தடை ஏற்பட்டு அதனை சரி செய்ய முடியாததால் பொதுமக்கள் வீதிக்கு வந்து போராடும் கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். புதுவையில் தொடர்கதையாகியுள்ள இப்பிரச்சினைக்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

click me!