கேரளாவில் “ கிளவுட் பர்ஸ்ட்” … 13 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் !! அணைகளில் திற்நது விடப்படும் கட்டுக்கடங்காத வெள்ளம் !! உச்சகட்ட எச்சரிக்கை !!

By Selvanayagam PFirst Published Aug 17, 2018, 10:10 AM IST
Highlights

கேரளாவில் கனமழை அடித்து ஊற்றி வரும் நிலையில் தற்போது காசர்கோடு மாவட்டம் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் அதிகன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணைகளில் இருந்து பெருமளவு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதையடுத்து ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் பொது மக்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர்.

கேரளாவில் பருவ மழையின் கோரத்தாண்டவம் தீவிரமடைந்து வரும் நிலையில், மாநிலத்தின் 14 மாவட்டங்களும் தொடர்ந்து வெள்ளத்தில் மிதக்கின்றன. அத்துடன் மாநிலத்தில் உள்ள 39 நீர்த்தேக்கங்களில் 35 அணைகளும் திறக்கப்பட்டு உள்ளதால் வரலாறு காணாத பேரழிவை மாநிலம் சந்தித்து வருகிறது.

முல்லைப்பெரியாறு, இடுக்கி, இடமலையார் அணைகளில் இருந்து வெளியேறும் தண்ணீர் கரையோர மக்களை பேரழிவுக்கு தள்ளி இருக்கிறது. சாலைகள் அனைத்தும் நீரோட்டமாக மாறியிருப்பதால், அங்கு பாதை எது? ஆறு எது? என வேறுபாடு காணமுடியாத அளவுக்கு முற்றிலும் வெள்ளக்காடாகி வருகிறது.

இதனால் சாலை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. வெள்ள நீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் உள்ள மக்களை, பேரிடர் மீட்புக்குழு முப்படை வீரர்கள் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இவ்வாறு மீட்கப்படும் மக்கள் அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இதற்காக 1,067 முகாம்கள் மாநிலம் முழுவதும் திறக்கப்பட்டு உள்ளன. இதில் சுமார் 2 லட்சம் பேர் தஞ்சமடைந்து இருக்கின்றனர். 

இந்நிலையில் நேற்று  மாலை முதல் மிகக் கடுமையான மழை பெய்து வருகிறது, கிளவுட் பர்ஸ்ட் என்று சொல்லும் அளவுக்கு அதிகன மழை பெய்து வருகிறது. வானம் பொத்துக் கொண்டு ஊற்றுவதால் மக்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர். இதையடுத்து காசர்கோடு மாவட்டத்தைத் தவிர அனைத்து மாவட்டங்களிலும் உச்சகட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

click me!