பாலியல் பலாத்கார வழக்கு - உ.பி. அமைச்சர் காயத்ரி பிரஜாபதி கைது

First Published Mar 15, 2017, 3:19 PM IST
Highlights
Rape case - UP Gayatri Prajapati minister arrested


பாலியல்  பலாத்கார வழக்கில் கடந்த ஒரு மாதமாக தேடப்பட்டு வந்த உத்தரப்பிரதேச மாநில நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் காயத்ரி பிராஜபதியை போலீசார் நேற்று லக்னோ நகரில் கைது செய்தனர்.

அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க ‘போஸ்கோ’ நீதி மன்றம் உத்தரவிட்டது.

பாலியல் பலாத்காரம்

உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் அகிலேஷ் யாதவ் அமைச்சரவையில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்தவர் காய்த்ரி பிரஜாபதி(வயது49). கடந்த 2014ம் ஆண்டு  இளம்பெண் ஒருவரை கூட்டாக பலாத்காரம் செய்தது, மற்றும் அவரின் சிறுவயது மகளை பலாத்காரம் செய்ய முயற்சித்தது ஆகிய வழக்கு  பிரஜாபதி மீது நிலுவையில் இருந்தது.

உச்ச நீதிமன்றம் உத்தரவு

இது தொடர்பாக மாநில போலீசார் இவர் மீது நடவடிக்ைக ஏதும் எடுக்காததால், பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. உச்ச நீதிமன்றம் உத்தரவின் பேரில் கடந்த பிப்ரவரி 17-ந் தேதிபிரஜாபதி உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் 6 பேரை போலீசார் ஏற்கனவே கைது செய்துவிட்டனர்.

8 வாரங்கள்

ஆனால், பிரஜாபதி மட்டும்  தலைமறைவானார். முன் ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுவையும் நிராகரித்த உச்ச நீதிமன்றம்  ‘பாஸ்போர்ட்டை’ முடக்கி, அடுத்த 8 வாரங்களுக்குள் பிரஜாபதி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யவும்  உத்தரவிட்டு இருந்தது.

தலைமறைவு

இந்த நிலையில்  அமேதி கிழக்கு தொகுதியில் சமாஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிட்ட பிரஜாபதி, கடந்த மாதம் 27-ந் தேதி வாக்களித்து தலைமறைவானார். ஆனால், இந்த தேர்தலில் 
தேர்தலில் அவர் தோல்வி அடைந்தார்.

தீவிரம்

தேர்தலில் சமாஜ்வாதி கட்சியும் தோல்வி அடைந்தது.  அங்கு பாரதிய ஜனதா கட்சி புதிதாக ஆட்சி அமைக்க இருக்கிறது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து பிரஜாபதியை கைது செய்வதில் போலீசார் தீவிரம் காட்டினார்கள்.

கைது

பல இடங்களிலும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட நிலையில், லக்னோவில் உள்ள ஆஷியானா பகுதியில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்த பிரஜாபதியை போலீசார் கைதுசெய்தனர்.

போலீசார் அவரை சொகுசு காரில் அழைத்துச் செல்வதை ஊடகங்கள் ஒளிபரப்பியதைத் தொடர்ந்து போலீசார், அவரை மாற்றி, தங்கள் வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.

14 நாட்கள் சிறை

இது குறித்து போலீஸ் டி.ஜி.பி. ஜாவித் அகமது கூறுகையில், “ லக்னோஆஷியானா பகுதியில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்தபோது, அமைச்சர்பிரஜாபதியை கைது செய்தோம். இவர் அடிக்கடி தனது இருப்பிடத்தை மாற்றிக்கொண்டே இருந்ததால், இவரைக் கைது செய்வது சவாலாக இருந்தது. இவரை குழந்தை பாலியல் தடுப்பு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினோம். 14 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்'' என்றார்.

நான் நிரபராதி....

பிரஜாபதியை கைதுசெய்து அழைத்துச் செல்லும்போது, அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “ நான் அப்பாவி, நிரபராதி, சதித்திட்டம் தீட்டப்பட்டு, என்ன சிக்கவைத்து விட்டார்கள். உண்மை கண்டறியும் சோதனை மூலம் உண்மை வெளிவரும். அந்த சிறுமிக்கும் இதே சோதனை நடத்தப்பட வேண்டும்'' என்றார்.

click me!