
ராஜீவ் படுகொலை பற்றி 5 ஆண்டுகளுக்கு முன்பே கணித்த ‘சி.ஐ.ஏ.’
ராஜீவ் காந்தி படுகொலை குறித்து, அமெரிக்க உளவு அமைப்பான ‘சி.ஐ.ஏ.’ 5 ஆண்டுகளுக்கு முன்பே கணித்து இருந்த பரபரப்பு தகவல் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வெளியாகி உள்ளது..
5 ஆண்டுகளுக்கு முன்பே...
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, கடந்த 1991-ம் ஆண்டு மே மாதம் 21-ந்தேதி தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரசாரம் செய்தபோது படுகொலை செய்யப்பட்டார்.
ஆனால், அதற்கு 5 ஆண்டுகளுக்கு முன்பே, அமெரிக்காவின் உளவு அமைப்பு (சி.ஐ.ஏ.) ராஜீவின் படுகொலை பற்றிய கணித்து இருந்தது, தகவல் உரிமை சட்டத்தின் கீழ் இப்போது வெளியாகி உள்ளது.
ராஜீவுக்குப் பிறகு...
1986-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ‘ராஜீவுக்குப் பிறகு இந்தியா ….’ என்று தொடங்கும் தலைப்பில் 23 பக்க அறிக்கையை சி.ஐ.ஏ. தயாரித்து இருந்தது.
அந்த தலைப்பின் மீதம் உள்ள வார்த்தைகள் மற்றும் உள்ளடக்கத்தின் சில பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன.
படுகொலைக்கு வாய்ப்பு
இந்த அறிக்கையின் முதல் வரியில், “பதவிக் காலம் முடிவடைவதற்குள் (1989) பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட வாய்ப்பு உள்ளது” என கூறப்பட்டுள்ளது.
எனினும், அதன் பிறகு இடம்பெற்ற வாசகங்களில், “ராஜீவின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது” என கூறப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையின் முதல் பகுதியில், ராஜீவுக்குப் பிறகு திடீரென தலைமையில் மாற்றம் ஏற்பட்டால் உள்நாட்டு மற்றும் சர்வதேச அரசியலில் எத்தகைய மாற்றம் ஏற்படும்?.
அமெரிக்கா, ரஷியா மற்றும் அண்டை நாடுகளுடனான இந்திய அரசின் உறவு எப்படி இருக்கும்? என அலசப்பட்டுள்ளது.
தீவிரவாத குழுக்களால்
‘படுகொலை அச்சுறுத்தல்’ என்ற பகுதியில், பல்வேறு தீவிரவாத குழுக்களால் ராஜீவ் உயிருக்கு ஆபத்து உள்ளது என கூறப்பட்டுள்ளது.
சீக்கியரோ அல்லது காஷ்மீர் முஸ்லிமோ ராஜீவை கொலை செய்தால், வட இந்தியாவில் ராணுவம், துணை ராணுவத்தை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தினாலும் மத வன்முறை பெரிய அளவில் வெடிக்கும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது
.பிரதமராக நரசிம்மராவ்
ராஜீவுக்குப் பிறகு பி.வி.நரசிம்ம ராவ் அல்லது வி.பி. சிங் இடைக்கால பிரதமராக பொறுப்பேற்க வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இதன்படியே 1991-ல் நரசிம்ம ராவ் பிரதமரானார் என்பது குறிப்பிடத்தக்கது.
விடுதலைப்புலிகள்?
எனினும் இந்த அறிக்கையின் முக்கிய பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன. எனவே, இலங்கை விடுதலைப்புலிகள் அமைப்பினால் ராஜீவ் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததாக அதில் குறிப்பிடப்பட்டிருந்ததா என தெளிவாகத் தெரியவில்லை.
அதே நேரத்தில், இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையிலான பிரச்சினைக்கு தீர்வு காண ராஜீவ் முயற்சி மேற்கொண்டது பற்றி ஆழமாக இந்த அறிக்கையில் அலசப்பட்டு உள்ளது.