
பாட்னா, அக்.19-
ரெயில் நிலையங்களில் உள்ள ‘வை-பை’ இணைய தள வசதியை அதிகம் பயன்படுத்தியதில் பாட்னா முதலிடத்தில் உள்ளது.
வை-பை வசதி
நாட்டில் அதிகமாக ‘வை-பை’ இணைய சேவையை பயன்படுத்திய ரெயில் நிலையமாக பீகார் மாநில தலைநகர் பாட்னா ரெயில் நிலையம் விளங்குகிறது. கிழக்கு மத்திய ரெயில்வேயின் கீழ்வரும் பாட்னா ரெயில் நிலையம் பீகாரில் முதல் முறையாக வை-பை சேவை பெற்ற நிலையம் ஆகும்.
மேலும் இந்த ரெயில் நிலையம் மிகவும் கூட்டம் நிறைந்த ரெயில் நிலையங்களில் ஒன்றாகும், மிகவும் பழமை வாய்ந்த ரெயில் நிலையமும் கூட. இங்கு தினமும் 200-க்கும் மேற்பட்ட ரெயில்கள் வந்து செல்கின்றன. ரெயில்டெல் தகவலின்படி, பயனாளர்கள் பாட்னா ரெயில் நிலையத்தில் யூடியூப்-பையே அதிகமாக பார்த்து உள்ளனர்.
பதிவிறக்கம்
அதற்கு அடுத்தபடியாக விக்கிப்பீடியா உள்ளது. “அனைத்தையும் விட ஆபாச இணையதளங்களே அதிகமாக பார்க்கப்பட்டு உள்ளது, பதிவிறக்கம் செய்யப்பட்டு உள்ளது. இவற்றில் சிலர் வை-பை சேவையை இணைய ஆப்ளிகேஷன்கள், பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களை பதிவிறக்கம் செய்து உள்ளனர்.
பாட்னாவை அடுத்து அதிகமாக இலவச வை-பை சேவையால் பயன்பெறும் ரெயில் நிலையமாக ஜெய்பூர் ரெயில் நிலையம் உள்ளது. அடுத்தடுத்த இடங்களை பெங்களூருவும், டெல்லியும் பிடிக்கிறது.
வேகம் குறைவு
இப்போது பாட்னா ரெயில் நிலையத்திற்கு ரெயில்டெல் ஒரு ஜிகாபைட் அளவிலான வை-பை சேவையை வழங்குகிறது. பயனாளர்கள் மற்றும் இளைஞர்கள் தினமும் இணையத்தை பயன்படுத்தும் காரணத்தினால் அதனுடைய வேகம் குறைந்து உள்ளது.
எனவே ரெயில்டெல் வை-பை சேவையை 10 ஜிகா பைட்டாக உயர்த்த திட்டமிட்டு உள்ளது. பாட்னா ரெயில் நிலையத்தில் கடந்த மாதம் வை-பை சேவை தொடங்கப்பட்டது. அதனுடன் விசாகப்பட்டினம், ராஞ்சி மற்றும் மும்பை சென்ட்ரல் ரெயில் நிலையங்களில் முதல்முறையாக இலவச வை-பை சேவை தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.