மதவெறிக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டிய நேரம் இது... ராகுல்காந்தி பரபரப்பு டிவீட்!!

By Narendran SFirst Published Jan 4, 2022, 9:43 PM IST
Highlights

பெண்களை இழிவுபடுத்துதல் மற்றும் மதவெறிக்கு எதிராக மக்கள் குரல் கொடுக்க வேண்டிய நேரம் இது என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

பெண்களை இழிவுபடுத்துதல் மற்றும் மதவெறிக்கு எதிராக மக்கள் குரல் கொடுக்க வேண்டிய நேரம் இது என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். முஸ்லிம் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் சுல்லி என்ற வார்த்தையை சிலர் பயன்படுத்துவதாக புகார் உள்ளது. சுல்லி டீல்ஸ் முஸ்லிம் பெண்களை ஏலம் விடும் வகையில் சுல்லி டீல்ஸ் என்ற சமூக வலைதளம் பயன்பாட்டில் இருந்தது. பலத்த எதிர்ப்பு எழுந்ததால் அதை, மத்திய அரசு கடந்தாண்டு முடக்கி வைத்தது. இந்நிலையில் முஸ்லிம் பெண்களை ஏலம் விடும் புல்லி பாய் என்ற செயலி பயன்பாட்டில் உள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பல முஸ்லிம் பெண்கள் புகார் அளித்து உள்ளனர். டில்லியைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் இஸ்மத் ஆரா, சமூக வலைதளத்தில் புகார் கூறியிருந்தார். சிவசேனா கட்சியின் பிரியங்கா சதுர்வேதியும், இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். பாஜகவைச் சேர்ந்த மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கும் அந்தப் பதிவை அனுப்பியிருந்தார். இதன் அடிப்படையில் நடவடிக்கை எடுத்து உள்ளதாக அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துஉள்ளார்.

இணையதளத்தில் செயலிகளை பதிவு செய்யும் கிட்ஹப் தொகுப்பு அமைப்புக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு புல்லி பாய் சமூக வலைதளம் உடனடியாக முடக்கி வைக்கப்பட்டுள்ளது என, அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்து உள்ளார். மேலும், இது தொடர்பாக உரிய நடவடிக்கைகள் எடுக்கும்படி, டில்லி போலீஸ் மற்றும் ஐசெர்ட் எனப்படும் கம்ப்யூட்டர் அவசரகால உதவி அமைப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டு உள்ளார். இந்த செயலியில் முஸ்லிம் பெண்களின் படங்களை பதிவிட்டு, அவை ஏலத்துக்கு விடப்படுகின்றன. உண்மையில் அவர்கள் ஏலம் விடப்படாவிட்டாலும், ஏலத்தில் பதிவிட்டுள்ளதன் வாயிலாக, அவர்களை இழிவுபடுத்துவதே இந்த செயலியை உருவாக்கியவர்களின் நோக்கம். இந்த செயலியை முடக்கியதுடன், அதை உருவாக்கியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி உள்ளனர்.

பெண் பத்திரிகையாளர் ஒருவர், தன் புகைப்படங்களை சில மர்ம நபர்கள் சர்ச்சைக்குரிய இணையதளத்தில் ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டுள்ளதாக டில்லி போலீசில் புகார் அளித்திருந்தார். இதையடுத்து அடையாளம் தெரியாத நபர்கள் மீது போலீசார், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.  இந்த நிலையில் பெண்களை இழிவுபடுத்துதல் மற்றும் மதவெறிக்கு எதிராக மக்கள் குரல் கொடுக்க வேண்டிய நேரம் இது என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவரது டிவிட்டர் பதிவில், பெண்களை இழிவுபடுத்துவது மற்றும் வகுப்புவாத வெறுப்பை நாம் ஒரே குரலில் எதிர்த்தால் மட்டுமே நிற்கும் என்று தெரிவித்திருக்கிறார். முஸ்லீம் பெண்களை குறிவைத்து அவர்களின் புகைப்படங்களை வெளியிட்ட புல்லி பாய் செயலி மீது நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில், அவர் இந்த கருத்துக்களை தெரிவித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

click me!