பிரதமர் நரேந்திர மோடிக்கு பஞ்சாப் மாநில அரசும், காவல்துறையும் போராட்டம் குறித்து முன்பே அறிந்திருந்தும், வேண்டுமென்றே பாதுகாப்பு அளிக்காதது அம்பலமாகியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக கடந்த 5ம் தேதி பஞ்சாப்புக்கு சென்றார். அப்போது, வானிலை சரியில்லாத காரணத்தால் கடைசி நேரத்தில், அவரது ஹெலிகாப்டரில் பயணம் ரத்து செய்யப்பட்டு, பஞ்சாப்பிற்குள் சாலை மார்க்கமாக காரில் பயணித்தார். அப்போது, பிரதமர் மோடி பயணித்த சாலையில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். பிரதமர் செல்லும் வழியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதனால் பாதுகாப்பு காரணமாக மேம்பாலம் ஒன்றில் 20 நிமிடங்கள் பிரதமர் மோடி காத்திருந்தார். பிரதமருக்கு பஞ்சாப் அரசும் போலீஸும் சரியான முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்கவில்லை. பஞ்சாப்பில் ஆளும் காங்கிரஸ் அரசு மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடந்துவருகிறது.
பிரதமர் மோடிக்கு பஞ்சாப் மாநில அரசும் போலீஸும் பாதுகாப்பு அளிக்காத விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், காவல்துறை உயரதிகாரிகளுக்கு இப்படியெல்லாம் நடக்கும் என்பது தெரிந்தும் கூட, பிரதமருக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவில்லை என்பது இந்தியா டுடே ஊடகத்தின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தியா டுடே இதுதொடர்பாக ஃபெரோஸ்புர் டி.எஸ்.பி சுக்தேவ் சிங்கிடம் பேசியுள்ளது. அப்போது, நடந்த உண்மைகள் அனைத்தையும் புட்டுப்புட்டு வைத்துள்ளார் டி.எஸ்.பி சுக்தேவ் சிங்.
இதுதொடர்பாக பேசியுள்ள டி.எஸ்.பி சுக்தேவ் சிங், பிரதமர் நரேந்திர மோடி செல்லும் சாலையை போராட்டக்காரர்கள் மறிக்க திட்டமிட்டிருப்பதாக, ஜனவரி 2ம் தேதியே கூடுதல் டிஜிபி-யிடம் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்திருந்தோம்.
ஜனவரி 5ம் தேதி பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் ஃபெரோஸ்பூருக்கு செல்வதாக திட்டமிடப்பட்டது. ஆனால் மோசமான வானிலை காரணமாக பிரதமர் மோடி சாலை மார்க்கமாக செல்ல நேரிட்டால், அந்த சாலையை சீல் வைத்து, சுத்தப்படுத்த வேண்டும் என்று மாநில அதிகாரிகளுடன் பகிர்ந்துகொண்ட சிறப்பு பாதுகாப்பு குழு திட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணத்தன்று, திட்டமிடப்பட்டிருந்த போராட்டம் தொடர்பான உளவுத்துறை உள்ளீடுகளும் காவல்துறை உயரதிகாரிகளிடம் பகிரப்பட்டது. ஆனாலும் பிரதமர் செல்லும் பாதையில் எந்தவிதமான பாதுகாப்பு முன்னேற்பாடுகளும் செய்யப்படவில்லை என்பதை டி.எஸ்.பி சுக்தேவ் சிங் அம்பலப்படுத்தியுள்ளார்.