மருத்துவ கல்லூரிக்கு ஆன்-லைன் மூலம் மாணவர் சேர்க்கை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார். மேலும் ஆன்-லைனில் மாணவர் சேர்க்கை நடத்தினால் இனி முறைகேடு நடக்காது என்று அவர் தெரிவித்தார்.
புதுச்சேரியில் நான்கு நிகர்நிலை மருத்துவ பல்கலைக் கழகங்கள், மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டுக்கான புதுச்சேரியில் செண்டாக் மூலமாக மருத்துவ கலந்தாய்வு நடைபெற்று வந்தது.
தனியார் மருத்துவக் கல்லூரிகளின் விதிமீறல்களைத் தகுந்த ஆதாரத்துடன் புதுச்சேரி மாணவர்-பெற்றோர் சங்கங்கள் சார்பில் இந்திய மருத்துவக் கவுன்சிலுக்குப் புகாராக அனுப்பப்பட்டது.
மாணவர்களின் புகாரை அடுத்து செண்டாக் அலுவலகத்தில் ஜூன் 27 ஆம் தேதி சிபிஐ சோதனை நடத்தியது. அதில் கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில் சிபிஐ 13 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஐஏஎஸ் அதிகாரிகள் நரேந்திரகுமார், பாபு, சுகாதார துறை இயக்குனர் ராமன், சென்டாக் அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.
இதைதொடர்ந்து செண்டாக் அதிகாரிகள் வீட்டிலும் புதுவை சுகாதாரத்துறை இயக்குனர் ராமன் வீட்டிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், மருத்துவ கல்லூரிக்கு ஆன்-லைன் மூலம் மாணவர் சேர்க்கை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், ஆன்-லைனில் மாணவர் சேர்க்கை நடத்தினால் இனி முறைகேடு நடக்காது எனவும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.