
புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை 2022 ஜனவரி 2 ஆம் தேதி வரை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதற்கிடையே பாதிப்பு கணிசமான அளவு குறைந்ததால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் ஒருசில மாநிலங்களில் இன்னும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு தான் வருகிறது. அந்த வகையில் புதுச்சேரி மாநிலத்தில் நோய்த் தொற்றைத் தடுக்கும் பொருட்டு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை 2022 ஜனவரி 2 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்மஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு கொண்டாட பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தை ஒட்டி 24, 25 ஆகிய தேதிகளில் இரவு நேர ஊரடங்கும், புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு 30, 31,1 ஆம் ஆகிய நாட்களிலும் இரவு ஊரடங்கில் தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளது. 31 ஆம் தேதி இரவு, ஒன்றாம் தேதி மற்றும் இரண்டாம் தேதி இரவு ஆகிய நாட்களில், விடியற்காலை 2 மணியிலிருந்து 5 மணி வரை மட்டுமே இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை பொதுமக்கள் கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி கொண்டாட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒமிக்ரான் பரவல் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றியும், பண்டிகை காலங்களில் பண்டிகைகளை கொண்டாடவும் புதுச்சேரி அரசு அறிவுறுத்தியுள்ளது. பொது மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் கொரோனா கட்டுப்பாடுகளுடன் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புத்தாண்டை முன்னிட்டு கவால் துறையிடம் அனுமதி பெற்று கூடுதல் நேரம் இரவு நேர மதுபான கடைகளை திறக்கலாம் எனவும் அம்மாநில அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.