
சிவசேனா எம்.பி. ரவீந்திர கெய்க்வாட்டுக்கு விமானத்தில் பறக்க விதிக்கப்பட்டு இருந்த தடையை ஏர்இந்தியா நிறுவனம் நேற்றுமுன்தினம் நீக்கியது. அதைத் தொடர்ந்து, தனியார் நிறுவனங்கள் கொண்ட இந்திய விமானநிறுவனங்கள் கூட்டமைப்பும் அவர் மீதான தடையை விலக்கிக் கொண்டன.
சிவசேனா கட்சி எம்.பி. ரவீந்திர கெய்க்வாட் கடந்த 2 வாரங்களுக்கு முன் ஏர் இந்தியா விமானத்தில்புனேயில் இருந்து டெல்லிக்கு பயணித்தார். அப்போது இவருக்கும் விமான மேலாளருடன் இடையே இருக்கை ஒதுக்கீடு தொடர்பாக நடந்த வாக்குவாதத்தில், ஊழியரை செருப்பால் அடித்தார் கெய்க்வாட்.
அனுமதி மறுப்பு
இந்த விவகாரம் பெரிய அளவில் உருவெடுத்ததையடுத்து, ஏர் இந்தியா நிறுவனம் உள்ளிட்ட அனைத்து தனியார் நிறுவனங்களும் கெய்க்வாட்டை விமானத்தில் ஏற்ற மறுத்தன. பல முறைடிக்கெட் முன்பதிவு செய்தும் அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
மன்னிப்பு கடிதம்
அதன்பின், தனிப்பட்ட முறையில் வருத்தம் தெரிவித்தும், இதுபோல் இனி சம்பவங்கள் நடக்காது என்றும் தடையை விலக்கக் கோரி மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் அசோக்கஜபதி ராஜூவுக்ு கெய்க்வாட் கடிதம் எழுதினார்.
தடை நீக்கம்
இதையடுத்து, மத்திய சிவில் விமானப்போக்குவரத்து அமைச்சகம் கெய்க்வாட்டுக்கு விதிக்கப்பட்டு இருந்த தடையை ஏர் இந்தியா விலக்கிக் கொள்ள உத்தரவிட்டது.
தனியார் விமானங்கள்
இந்நிலையில், தனியார் விமானநிறுவனங்களான ஜெட் ஏர்வேஸ், ஸ்பைஸ் ஜெட், கோஏர், இன்டிகோ, டாடாவின் விஸ்தாரா, ஏர் ஏசியா ஆகியவை கொண்ட இந்திய விமானங்கள் கூட்டமைப்பும் ரவீந்திர கெய்க்வாட் மீதான தடையை விலக்கிக் கொண்டுள்ளன.
கெய்க்வாட்டின் உறுதியை நம்புகிறோம்
இது குறித்து இந்திய விமானங்கள் கூட்டமைப்பின் துணை இயக்குநரான உஜ்வால் விஜய் கூறுகையில், “ சிவசேனா எம்.பி. ரவீந்திர கெய்க்வாட் அளித்த மன்னிப்பு கடிதத்தின் மீது மனநிறைவு ஏற்பட்டு, ஏர் இந்தியா விமான நிறுவனம் கெய்க்வாட்டுக்கு விதித்து இருந்த தடையை நீக்கியது. விமான ஊழியர்களுக்கும், சொத்துக்களுக்கும் மதிப்பு அளிப்பேன் என கெய்வாட் உறுதி அளித்துள்ளார். அதைத் தொடர்ந்து, அவர் மீது விதிக்கப்பட்டு இருந்த தடையை விலக்கிக் கொள்ள இந்திய விமானங்கள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது’’ என்று தெரிவித்தார்.
ரெயிலில் மும்பை சென்றார்
இதற்கிடையே டெல்லியில் நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்று இருந்த ரவீந்திர கெய்க்வாட், ஏர்இந்தியா நிறுவனம் தடையை விலக்கிய நிலையிலும் அவர் விமானத்தில் பயணிக்க வில்லை. மாறாக அவர் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணித்து டெல்லியில் இருந்து மும்பை சென்றார்.
மும்பைக்கு நேற்று காலை சென்ற ரவீந்திர கெய்க்வாட், பாந்த்ரா பகுதியில் உள்ள மாதோஸ்ரீ இல்லத்தில் சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேயை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பில் என்ன பேசப்பட்டது என்பது குறித்த விவரங்களை சிவசேனா தெரிவிக்கவில்லை.