பெண்கள் பயன்படுத்தும் நாப்கின்கள் மீது விதிக்கப்பட்டுள்ள 12 சதவீத சரக்கு மற்றும் சேவை வரியை(ஜி.எஸ்.டி.) திரும்பப் பெறக்கோரி பிரதமர் மோடிக்கு ஆயிரம் நாப்கின்களை அனுப்பி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
12 % ஜி.எஸ்.டி.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைமுறைக்கு வந்த ஜி.எஸ்.டி. வரி முறையில், பெண்கள் மாதவிலக்கு காலத்தில் பயன்படுத்தும் ‘நாப்கின்’களுக்கு 12 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டது. மாதவிலக்கு சுகாதாரத்தை வலியுறுத்தி பல மகளிர் அமைப்புகளும், தொண்டு நிறுவனங்களும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. கேரளா மாநில அரசு பள்ளிகளில் கூட இலவச நாப்கின்கள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
வரிவிலக்கு
நாப்கின்களுக்கு விதிக்கப்பட்ட 12 சதவீத வரியை திரும்பப் பெறக்கோரி பல்வேறு மகளிர் அமைப்புகள் சார்பிலும், பெண்களும் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், மத்திய பிரதேசம் மாநிலம், குவாலியர் நகரில் உள்ள பள்ளி மாணவிகள் 1000 நாப்கின்களைபிரதமர் மோடிக்கு அனுப்பி ஜி.எஸ்.டி. வரியை திரும்பப் பெற போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஆயிரம் நாப்கின்கள்
கடந்த 4ந்தேதி தொடங்கிய இந்த போராட்டத்தில் ஜி.எஸ்.டி. வரியை திரும்பப் பெற வேண்டும், பெண்கள் மீதான கொடுமையை தடுத்து நிறுத்த வேண்டும், பெண்களுக்கு அதிகாரமளிக்க வேண்டும், 33 சதவீத இட ஒதுக்கீட்டை நிறைவேற்ற வேண்டும் என்ற வாசகங்களை ஆயிரம் நாப்கின்கள் மீது எழுதி வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு சமூக ஊடகங்களில் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
பெண்களுக்கு ஆதரவாக
இந்த போராட்டம் குறித்து மாணவர் ஹரி மோகன் கூறுகையில், “ குவாலியர் மாணவிகளுக்காக மட்டும் இந்த போராட்டம் நடத்தப்படவில்லை, நாட்டில் உள்ள அனைத்து பெண்களுக்கும் ஆதரவாகவே இந்த போராட்டம் நடத்துகிறோம். ஆடம்பர பொருட்களுக்கு வரிச்சலுகை கொடுப்பதை கைவிட்டு, நாப்கின்களுக்குவரிச்சலுகை அளிக்க வேண்டும்.
சுகாதாரமற்ற முறை
பிரதமர் மோடியால் மட்டுமே இதை செய்ய முடியும். பெண்களுக்கு வரியில்லாமல் நாப்கின்கள் கிடைக்க வழி செய்ய முடியும். கிராமங்களில் உள்ள பெண்கள் மாதவிலக்கு நேரத்தில் நாப்கின்கள் பயன்படுத்துவதற்கு பதிலாக சுகாதாரமற்ற முறையை கையாளுகின்றனர். இதற்காகவே இந்த போராட்டத்தையும், விழிப்புணர்வு பிரசாரத்தையும் தொடங்கி இருக்கிறோம்’’ என்று தெரிவித்தார்.