
சபரிமலை பம்பை நதியில் சோப்பு, எண்ணெய் பயன்படுத்தி பக்தர்கள் குளிக்க தடை விதித்து பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை மீறுபவர்களுக்கு ஒன்றரை முதல் 6 வருடம் வரை சிறை தண்டனை வழங்கப்படும் என்றும் உத்தரவிடப்ட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டல, மகர விளக்கு பூஜை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவையொட்டி வருகிற 15 ஆம் தேதி அன்று கோயில் நடை திறக்கப்படுகிறது. மண்டல மற்றும் மகர விளக்கு பூஜையையொட்டி கார்த்திகை மாதம் 1 ஆம் தேதி முதல் 60 நாட்கள் அய்யப்பன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன.
மண்டல பூஜைக்கான ஏற்பாடுகள் இறுதி கட்டத்தில் உள்ளதாக திருவிதாங்கோடு தேவசம்போர்டு தலைவர் பிரயார் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மண்டல பூஜையை முன்னிட்டு இந்தியாவின் பல்வேறு இடங்களில் இருந்தும் பக்தர்கள் சபரிமலையில் கூடுவார்கள்.
இங்கு வரும் பக்தர்கள், புனித நீரான பம்பையில் குளித்த பிறகே சாமி தரிசனம் செய்ய சன்னிதானம் செல்வார்கள். இவ்வாறு செல்லும் பக்தர்கள் பம்பை ஆற்றில் சோப்பு, ஷாம்பு, எண்ணெய் பயன்படுத்தி குளிப்பது மற்றும் உடைகள், பிளாஸ்டிக் கவர்கள் உள்ளிட்ட கழிவுப் பொருட்களை வீசுவதாலும் பம்பை நதி அசுத்தம் ஆவதாக ஏராளமான புகார்கள் எழுந்தது.
இந்த புகார்களை அடுத்து, பம்பை நதியை மீட்க பத்தனம்திட்டா மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளது. ஏற்கனவே பம்பை ஆற்றை அசுத்தப்படுத்தக்கூடாது என மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.
பம்பை நதியில் பக்தர்கள் சோப்பு, எண்ணெய், ஷாம்பு பயன்படுத்தி குளிக்க பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் கிரிஜா தடைவிதித்து உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை மீறி குளித்தால் ஒன்றரை வருடம் முதல் 6 வருடம் வரை சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் என்றும் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த உத்தரவை அமல்படுத்த போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கேரளாவின் சுகாதாரம் மற்றும்
சுற்றுச்சூழல் கெடாமல் இருக்க ஒத்துழைக்க வேண்டும் என்று பக்தர்களிடம் பத்தணந்திட்டா மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.