ரயில் பயணிகள் இனி விமானங்களைப் போலவே தங்கள் லக்கேஜ் விஷயத்தில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டியிருக்கும். ரயிலில் எவ்வளவு லக்கேஜ் கொண்டு செல்லலாம் என்பது குறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மக்களவையில் முக்கிய விளக்கங்களை அளித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் எம்பி வேமிரெட்டி பிரபாகர் ரெட்டி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ரயிலில் ஒவ்வொரு வகுப்புக்கும் (Class) அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதல் லக்கேஜ் கொண்டு சென்றால், அதற்குக் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு வகுப்புக்கும் லக்கேஜ் கொண்டு செல்வதற்கான இலவச அளவு மற்றும் அதிகபட்ச அளவு பின்வருமாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
• இரண்டாம் வகுப்பு (Second Class): 35 கிலோ வரை இலவசம். அதிகபட்சம் 70 கிலோ வரை கொண்டு செல்லலாம் (கூடுதல் கட்டணத்துடன்).
• ஸ்லீப்பர் வகுப்பு (Sleeper Class): 40 கிலோ வரை இலவசம். அதிகபட்சம் 80 கிலோ வரை அனுமதி.
• ஏசி 3 டயர் / சேர் கார் (AC 3 Tier / Chair Car): 40 கிலோ வரை மட்டுமே அனுமதி. (இதற்கு மேல் லக்கேஜ் கொண்டு செல்ல முடியாது).
• முதல் வகுப்பு / ஏசி 2 டயர் (First Class / AC 2 Tier): 50 கிலோ வரை இலவசம். அதிகபட்சம் 100 கிலோ வரை அனுமதி.
• ஏசி முதல் வகுப்பு (AC First Class): 70 கிலோ வரை இலவசம். அதிகபட்சம் 150 கிலோ வரை கொண்டு செல்லலாம்.
"இலவச அளவைத் தாண்டி லக்கேஜ் கொண்டு சென்றால், சாதாரண லக்கேஜ் கட்டணத்தைப் போல 1.5 மடங்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்," என்று அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
பெட்டியின் அளவு: நீங்கள் கொண்டு செல்லும் பெட்டி, சூட்கேஸ் அல்லது டிரங்க் பெட்டியின் அளவு 100 செ.மீ x 60 செ.மீ x 25 செ.மீ (நீளம் x அகலம் x உயரம்) என்ற அளவிற்குள் இருக்க வேண்டும்.
பெரிய லக்கேஜ்கள்: மேலே குறிப்பிட்ட அளவை விட பெரிய பெட்டிகளை வைத்திருந்தால், அவற்றை நீங்கள் அமரும் பெட்டியில் கொண்டு செல்ல முடியாது. அவற்றை முன்பதிவு செய்து Brake Van அல்லது பார்சல் வாகனங்களில் மட்டுமே அனுப்ப முடியும்.
வணிகப் பொருட்கள்: விற்பனைக்காகக் கொண்டு செல்லப்படும் பொருட்களை தனிப்பட்ட லக்கேஜாகப் பயணிகள் பெட்டிக்குள் கொண்டு செல்ல அனுமதியில்லை.