
நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தேர்தலை ஒரேநேரத்தில் நடத்த தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து வருகிறது. இதற்காக ரூ.1009 கோடியை மத்தியஅரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
தற்போது நாடாளுமன்ற தேர்தல் தனியாகவும் பல்வேறு மாநிலங்களில் சட்டப் பேரவை தேர்தல்கள் தனித் தனியாகவும் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் தேர்தலை நடத்தும் செலவு பல மடங்கு அதிகரிக்கிறது.
மேலும் தேர்தல் ஏற்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்றவற்றிலும் தேர்தல் ஆணையம் அதிக கவனம் செலுத்த வேண்டி இருக்கிறது.
கால விரயம் மற்றும் அதிக அளவு செலவை கட்டுப்படுத்த நாடாளுமன்ற தேர்தலையும், சட்டப்பேரவைத் தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் கோரிக்கைகள் வந்தன. இது தொடர்பாக தேர்தல் ஆணையமும், மத்திய அரசும் தீவிரமாக பரிசீலனை செய்து வந்தன.
இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து மாநில சட்டப்பேரவை தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்த தயாராக இருப்பதாக தலைமை தேர்தல் ஆணையம் மத்திய அரசுக்கு தகவல் தெரிவித்துள்ளது. இதை மத்திய அரசும் ஏற்றுக் கொண்டுள்ளது.
ஆனால் ஒரே நேரத்தில் நாடாளுமன்ற தேர்தலையும் சட்டப்பேரவைத் தேர்தலையும் நடத்துவது தொடர்பாக எந்த சட்டமும் இயற்றப்பட மாட்டாது, தேவைக்கேற்ப அப்போது முடிவு எடுக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே ஒரே நேரத்தில் நாடு முழுவதும் தேர்தல் நடத்த வேண்டும் என்றால் 14 லட்சம் புதிய ஓட்டுப்பதிவு எந்திரங்கள் தேவைப்படுகிறது. இதற்கு மத்திய அரசு ரூ.1009 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் மூலம் அடுத்த 3 ஆண்டுகளில் தேவையான ஓட்டுப்பதிவு எந்திரங்கள் வாங்கப்படும். ஆண்டுக்கு 5 லட்சம் எந்திரங்கள் வீதம் மொத்தம் 15 லட்சம் எந்திரங்கள் வாங்க தேர்தல் கமிஷன் முடிவு செய்தள்ளது.
தேர்தல் ஆணையம் முடிவு ஏற்றுக்கொள்ளப்பட்டால் 2019 நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து அனைத்து மாநில சட்டசபை தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடைபெறும் வாய்ப்பு உள்ளது.