
இந்தியா- பாகிஸ்தான் இடையே உச்சக்கட்ட பதற்றம் நிலவி வரும் நிலையில் கடந்த நான்கு நாட்களாகே இந்திய எல்லைப்பகுதிகளில் பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்கு தரமான பதிலடி கொடுத்து வருகிறது. குறிப்பாக டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. ஆனால், வானிலையே இடைமறித்து சுட்டு வீழ்த்தி நமது பாதுகாப்பு படையினர் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சீக்கியர்களின் புனித தலமான பொற்கோயில் அமைந்துள்ள அமிர்தசரஸ் நகரை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் அரங்கேற்றி வருகிறது.
ஆனால், ஆயுதங்களை சுமந்து கொண்டு வந்த டிரோனை சுட்டு வீழ்த்திய புகைப்படங்களை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: நமது மேற்கு எல்லைகளில் பாகிஸ்தானின் டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இன்று அதிகாலை 5 மணியளவில், பஞ்சாப் அமிர்தசரஸில் உள்ள காசா கான்ட் மீது டிரோன் விமானங்கள் பறந்து செல்வது கண்டறியப்பட்டதும் உடனடியாக சுட்டு வீழ்த்தி அழித்தனர்.
மக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் பாகிஸ்தானின் முயற்சிகள் ஏற்றுக் கொள்ள முடியாதது. இந்திய இறையாண்மைக்கு ஆபத்தை ஏற்படுத்தும் பாகிஸ்தானின் சதித்திட்டங்களை ஏற்க முடியாது. பாகிஸ்தானின் திட்டங்களை தொடர்ந்து முறியடிப்போம் என தெரிவித்துள்ளனர். மேலும் பாகிஸ்தானின் தாக்குதல்கள் முறியடிக்கப்பட்ட வீடியோ காட்சிகளையும் வெளியிட்டுள்ளது.