
டெல்லியில் காங்கிரஸ் எம்பிக்களை கைது செய்த காவல்துறையினருக்கு முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். நேஷனல் ஹெரால்டு பங்கு விற்பனை தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியிடம் மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 3 நாட்கள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதை கண்டித்து காங்கிரஸ் சார்பில் நாடு முழுவதும் 3 ஆவது நாளாக நேற்று போராட்டங்கள் தொடர்ந்தன. இதில், டெல்லி காங்கிரஸ் அலுவலகத்திற்குள் போலீசார் புகுந்து காங்கிரஸ் எம்.பி.க்களை குண்டுக்கட்டாக தூக்கி சென்று அப்புறப்படுத்தியதாக கூறப்படுகிறது.
மேலும் காயப்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு மாநிலங்களின் ஆளுநர் மாளிகை முன்பு காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். இந்த நிலையில், டெல்லியில் காங்கிரஸ் எம்.பி.க்களை கைது செய்த போலீஸ், நாடாளுமன்ற உறுப்பினர்களின் அடிப்படை உரிமையை மீறிவிட்டது என்று ப.சிதம்பரம் கடுமையாக சாடியுள்ளார். மேலும் எழுத்துபூர்வமான எந்த ஆணையும் இன்றி காங்கிரஸ் எம்.பி.க்களை 12 மணி நேரம் கைது செய்து வைத்திருந்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
அதுமட்டுமின்றி எம்.பி.க்களை எதற்காக கைது செய்தது என்ற விளக்கத்தையும் டெல்லி போலீஸ் அளிக்கவில்லை எனவும் புகார் தெரிவித்துள்ளார். கைது செய்த எம்.பி.க்களுக்கு உணவும், தண்ணீரும் கூட டெல்லி போலீஸ் அளிக்க மறுத்துவிட்டதாக குற்றம்சாட்டிய அவர், கைது செய்த காங்கிரஸ் எம்.பி.க்களை அரியானா எல்லையில் உள்ள இடங்களுக்கு கொண்டு சென்று அலைக்கழித்ததாக கண்டனம் தெரிவித்துள்ளார். 3 நாட்களாக காங்கிரஸ் எம்.பி.க்கள், தொண்டர்களை போலீஸ் தாக்கியது பற்றி ராஜ்யசபா தலைவரிடம் புகார் செய்துள்ளதாகவும் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.