
டெல்டா வகை கொரோனா வைரஸை விட ஒமைக்ரான் வைரஸ் 5 மடங்கு வேகமாக பரவக்கூடியது என்று மத்திய சுகாதாரத் துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவில் கடந்த 24 ஆம் தேதி ஓமைக்ரான் வகை வைரஸ் முதல் முறையாக கண்டறியப்பட்டது. உலக சுகாதார அமைப்பால் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாக கூறப்படுகிறது. இந்த வைரஸ் தடுப்பூசியை அதிகமாக எதிர்க்கும் தன்மை கொண்டதாகவும் அறிகுறிகளும் தீவிரத்தன்மை கொண்டதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் ஓமைக்ரான் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளன. இதுவரை உருமாறிய கொரோனா வைரஸ்களில் டெல்டா வகை வைரஸ் அதிக ஆபத்தானது என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அதை விட வீரியமானது இந்த ஓமைக்ரான் வகை வைரஸ் என்று கூறப்படுகிறது. இது 32 முறை உருமாற்றமடைந்து ஓமைக்ரானாக பரவி வருவதாக கூறப்படுகிறது. ஆப்பிரிக்க நாடுகளில் பரவ ஆரம்பித்த இந்த ஒமைக்ரான், தற்போது பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கும் பரவியுள்ளது. இதனால் அச்சமடைந்த உலக நாடுகள் ஆப்பிரிக்க நாடுகள் இடையேயான போக்குவரத்தை ரத்து செய்துள்ளன.
மேலும் சில நாடுகள் அந்நாட்டிலிருந்து வருபவர்களை தீவிரமாக கண்காணிக்கின்றன. இந்த நிலையில் தென்னாப்பிரிக்கா, சீனா, நியூஸிலாந்து, ஹாங்காங், பிரிட்டன், பிரேஸில், வங்கதேசம், போட்ஸ்வானா, மோரீஷஸ், ஜிம்பாப்வே, சிங்கப்பூா், இஸ்ரேல் உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து இந்தியா வருகை தரும் பயணிகள், பயணத்திற்கு முன்பே கொரோனா நெகட்டிவ் சான்றிதழை சவிதா இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் இந்தியாவில் 2 பேருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தென் ஆப்ரிக்காவில் பெங்களூரு வந்த 2 ஆண்களுக்கு ஒமைக்ரான் வகை கொரோனா உறுதி செய்யபட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இரண்டு பேரில் ஒருவருக்கு 66 வயது மற்றொருவருக்கு 46 வயது என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதாரத் துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால், தென் ஆப்பிரிக்காவில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூரு வந்த 2 பேருக்கு ஒமைக்ரான் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த இருவரும் வெளிநாட்டினர் ஆவர். அவர்களுடன் தொடர்பில் இருந்த அனைவரும் கண்டறியப்பட்டு அவர்கள் தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளனர். கொரோனா தடுப்பு நடைமுறை பின்பற்றப்படும். ஒமைக்ரான் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களுக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே உள்ளன; கடுமையான அறிகுறிகள் இல்லை. ஒமைக்ரான் அச்சுறுத்தல் உள்ள நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயம். தொற்று உறுதியானால் அடுத்தகட்ட சிகிச்சை, இல்லையெனில் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர். உலகம் முழுவதும் இதுவரை 29 நாடுகளில் இதுவரை 373 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது; டெல்டா வகை கொரோனா வைரஸை விட ஒமைக்ரான் வைரஸ் 5 மடங்கு வேகமாக பரவக்கூடியது. ஒமைக்ரான் கொரோனாவை கண்டு அச்சப்படவேண்டாம். அதே வேளை விழிப்புணர்வுடன் இருப்பது முக்கியம் என்று தெரிவித்தார். இந்த நிலையில் கர்நாடகாவில் ஒமைக்ரான் உறுதியான இருவருடன் தொடர்பில் இருந்த 5 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.