சீனா எல்லையில் ராணுவ நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் லடாக்கில் உள்ள நியோமா விமானப்படை தளம் விரிவாக்கப்படுகிறது.
கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக லடாக் எல்லைப் பகுதியில் சீனாவின் ராணுவ நடவடிக்கைகள் அதிகரித்துள்ள நிலையில் அதனை எதிர்கொள்ளும் வகையில் நியோமா விமானப்படை தளம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
லடாக்கின் கிழக்குப் பகுதியில் உள்ள நியோமா என்ற இடத்தில் இந்திய விமானப்படை தளம் உள்ளது. இதனை ரூ.230 கோடி செலவில் விரிவாக்கம் செய்து போர் விமானங்களையும் கையாளும் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தின் கீழ் 2.7 கி.மீ. தொலைவுக்கு உறுதியான ஓடுபாதையும் அமைய உள்ளது. இத்திட்டத்திற்கான பணிகள் மே-ஜூன் மாதத்தில் தொடங்கும் என்று பாதுகாப்புத்துறையின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் தெரிவிக்கிறார்.
சீன எல்லையில் இருந்து 50 கி.மீ. தொலைவில் 13,400 அடி உயரத்தில் அமைந்த நியோமா விமானப்படை தளம் உள்ளது. ஏற்கெனவே இந்திய விமானப்படை நடவடிக்கைகளில் முக்கிய அங்கம் வகிந்துவருகிறது. நியோமாவில் இருந்து 190 கி.மீ. தொலைவில் லே மாவட்டத்திலும் விமானப்படை தளம் ஒன்று உள்ளது. அது 2020ஆம் ஆண்டு ஏப்ரல்-மே மாதம் முதல் தொடர்ந்து நடந்துவரும் சீனாவின் அத்துமீறலை எதிர்கொள்ள பயன்பட்டிருக்கிறது.
இப்போது நியோமா விமானப்படை தளம் கனரக சின்குக் ஹெலிகாப்டர், Mi-17 V5 ஹெலிகாப்டர், அப்பாச்சி ஹெலிகாப்டர், C-130J சூப்பர் ஹெர்குலஸ் விமானம் போன்றவற்றை இயக்க பயன்படுகிறது. இங்கு சுகோய், ரபேல் போன்ற போர் விமானங்களையும் கையாளும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட இருக்கிறது என்றும் இது விமானப்படையின் தடுப்பு மற்றும் தாக்குதல் நடவடிக்கைகளுக்கு பயன்படும் என்றும் மற்றொரு பாதுகாப்புதுறை அதிகாரி கூறுகிறார்.
லே, தொய்ஸ் போன்ற விமானப்படை தளங்களில் வானிலை அவ்வப்போது மோசமாக மாறிவிடுகிறது. ஆனால், நியோமாவில் பெரும்பாலான நேரத்திற்கு சீரான வானிலை காணப்படுகிறது என்பதும் விரிவாக்கப் பணிகளைச் செய்வதற்கு மற்றொரு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
2025ஆம் ஆண்டின் மத்தியில் நியோமா விமானப்படை தளம் விரிவாக்கம் முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Baadal Nanjundaswamy: கன்னட எழுத்துகளை கண்கவர் ஓவியங்களாக மாற்றிய கலைஞர்