ரயில் டிக்கெட் முன் பதிவுக்கு ஆதார் எண் கட்டாயமில்லை என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
ரயில் டிக்கெட் முன்பதிவின் போது, மூத்த குடிமக்கள், சலுகையில் பயணிப்போர் கண்டிப்பாக ஆதார் எண்ணை குறிப்பிட வேண்டும் என்று நடைமுறை கடந்த ஜனவரி 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
இதேபோல் மத்திய அரசின் சேவைகள், திட்டங்களைப் பெறுவதற்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வங்கிக்கணக்கு தொடங்க, வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்ய, காசநோய் நோயாளிகள் இலவச சிகிச்சை பெற, பெண்கள் பேறுகால மருத்துவம் சிகிச்சைக்கு என ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாநிலங்கள் அவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்து மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் ராஜென் கோஹெயின் கூறியதாவது-
இப்போது வரை ரயில் பயணத்தில் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் எண்ணை தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை.
ரயில் டிக்கெட் முன்பதிவின் போது ஆதார் எண்ணை தெரிவிப்பதை கட்டாயமாக்கும் திட்டமும் அரசுக்கு இல்லை. சலுகையில் பயணிக்கும் மூத்த குடிமக்கள், டிக்கெட் பரிசோதகர்களிடம் அடையாள ஆவணமாக ஆதார் எண்ணை பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற நடைமுறை கடந்த ஜனவரி1-ந்தேதி முதல் நடைமுறையில் இருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.