
தமிழகத்தில் வங்கிகளுக்கு டிசம்பர் 30-ந்தேதி வரை விடுமுறை கிடையாது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
நாட்டில் கள்ளநோட்டுக்களையும், கருப்பு பணத்தையும் ஒழிக்கும் நோக்கில், பிரதமர் மோடி ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை செல்லாது என அறிவித்து கடந்த 8-ந்தேதி அறிவித்தார்.
10-ந்தேதி முதல் வங்கிகள், தபால் நிலையங்களில் மக்கள் தங்களிடம் உள்ள செல்லாத ரூபாய் நோட்டுக்களை கொடுத்து புதிய ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொண்டு வருகின்றனர். 11-ந்தேதி முதல் ஏ.டி.எம். செயல்படும் என மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் தெரிவித்தது. ஆனால், ஏ.டி.எம்.களில் 90 சதவீதம் செயல்பாட்டுக்கு வரவில்லை.
இதனால், மக்கள் கையில் பணம் இல்லாமல் பரிதவித்தனர். வங்கிகளில் செல்லாத ரூபாய் நோட்டுக்களை மாற்ற கூட்டம் கூட்டமாக படையெடுக்கத் தொடங்கினர். காலையில் இருந்தே நீண்ட வரிசையில் காத்துகிடந்து, ரூ. 4 ஆயிரத்தை மட்டும் பெற்று வந்தனர். இதனால், மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி ஏற்பட்டது.
ஒரு சில ஏ.டி.எம். செயல்பட்ட போதிலும், அதில் இருக்கும் பணம் சில மணி நேரத்தில் தீர்ந்துவிட்டதால், மக்கள் ஏமாற்றமடைந்து, விரக்தியின் உச்சத்துக்கே சென்றனர்.
இதை உணர்ந்த ரிசர்வ் வங்கி, பொதுமக்களுக்கு பணம் தட்டுப்பாடின்றி கிடைக்கவும், செல்லாத ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொள்ளவும், வங்கிகள் தொடர்ந்து செயல்படும் என அறிவித்தது.
மக்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையில், தமிழகத்தில் உள்ள வங்கிகள் வரும் டிசம்பர் 30ந்தேதி வரை விடுமுறையில்லாமல் இயங்கும். மக்கள் சிரமமம் இன்றி ரூபாய்களை மாற்றிக் கொள்ளலாம் எனசென்னை மண்டல ரிசர்வ் வங்கி மேலாளர் அறிவித்துள்ளார்.