குழந்தைகள் இலவச, கட்டாய கல்வி பெறும் உரிமை சட்டம், கடந்த 2010–ம் ஆண்டு அமலுக்கு வந்தது. அதில், 1–ம் வகுப்பு முதல் 8–ம் வகுப்பு வரை மாணவர்களை ‘ஃபெயில்’ ஆக்கக்கூடாது என்றும், அவர்களை கட்டாய தேர்ச்சி பெறச்செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதன்படி, 8–ம் வகுப்பு வரை மாணவர்கள் கட்டாய தேர்ச்சி அளிக்கப்பட்டு மேல் வகுப்புக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.
இந்நிலையில், இந்த கட்டாய தேர்ச்சி முறையால் மாணவர்களின் கல்வித்திறன் பாதிக்கப்படுவதாக கல்வியாளர்கள் முறையிட்டனர்.
இதனால், கட்டாய தேர்ச்சி முறையை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், 8–ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறையை ரத்து செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
5 மற்றும் 8–ம் வகுப்பு இறுதியாண்டு தேர்வுகளில் தோல்வி அடையும் மாணவர்களை ‘பெயில்’ ஆக்குவதற்கு மாநிலங்களுக்கு அதிகாரம் அளிக்கப்படும்.
இருப்பினும், அதற்கு முன்பாக, அந்த மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தி மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்படும். இந்த மாற்றங்கள், இலவச கல்வி உரிமை மசோதாவில் சேர்க்கப்பட்டு, பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.