கர்நாடக மாநிலத்தில் டிசம்பர் 28 ஆம் தேதி முதல் தொடர்ந்து 10 நாட்களுக்கு இரவு ஊரடங்கு பிறபிக்கப்பட்டுள்ளது. ஒமைக்ரான் பரவலை தடுக்கும் வகையில் புத்தாண்டையொட்டி மக்கள் பொதுவெளியில் கூட்டம் கூடுவதற்கு அனுமதி மறுக்கபட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் டிசம்பர் 28 ஆம் தேதி முதல் தொடர்ந்து 10 நாட்களுக்கு இரவு ஊரடங்கு பிறபிக்கப்பட்டுள்ளது. ஒமைக்ரான் பரவலை தடுக்கும் வகையில் புத்தாண்டையொட்டி மக்கள் பொதுவெளியில் கூட்டம் கூடுவதற்கு அனுமதி மறுக்கபட்டுள்ளது.
கர்நாடகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் பரவுவதை தடுக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பெங்களூருவில் இன்று முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர், மருத்துவ நிபுணர்கள் , அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
கொரோனா தொற்று மற்றும் ஒமைக்ரான் பரவல் அச்சம் காரணமாக பல்வேறு மாநிலங்கள் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து வருகின்றன. மத்திய பிரதேசம், ஓடிசா, உத்தர பிரதேசம்,மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இரவு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் கர்நாடகத்தில் 31 பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கபட்டுள்ள நிலையில் டிசம்பர் 28ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி வரும் 28ம் தேதி முதல் 10 நாட்களுக்கு இரவு 10 மணியில் இருந்து காலை 5 மணி வரை 144 விதியின் கீழ் தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று கர்நாடகா சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார்.
புத்தாண்டையொட்டி கலைநிகழ்ச்சிகள் உட்பட எந்தவொரு விருந்து நிகழ்ச்சிகள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கேளிக்கை விடுதிகள், ஹோட்டல்கள், உணவகங்களில் 50 சதவீத இடங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் தெரிவிக்கபட்டுள்ளது. கர்நாடக அரசின் இந்த உத்தரவு காரணமாக பெங்களூரு உட்பட கர்நாடக மாநிலம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஒமைக்ரான் பரவலை கருத்தில் கொண்டு நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, கொரோனா தடுப்பூசிகள் குறித்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். ஜனவரி 3 ஆம் தேதி முதல் 15 -18 வயதினருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும். முதல்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு ஜனவரி 10ஆம் தேதி முதல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும். 60 வயதைக் கடந்தவர்கள்,இணை நோய்கள் உள்ள நபர்களும் ஜனவரி 10 முதல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தலாம். மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் இணை நோய் உள்ளோர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். மரபணு மற்றும் மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்துகள் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார்.